Friday, December 19, 2008

சுதந்திர போராட்ட வீரர்கள் தினம்


இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப் பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீரர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்தது தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல் லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில், ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக, ஆட்சியை அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது.

ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜென ரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்த மானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர் களை இந்நாளில் பிரித் தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இன்றுவரை நினைவு கூரு கின்றனர். ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் (Armistice day)என கொண்டாடப்பட்டு பின்னர் நினைவு தினமாக (Remembrance Day) மாற்றம் பெற்றது.

தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீரர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதே போல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது. பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படு கின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915ல் எழுதிய கவிதை வரிகளில் பெல் ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன என்றும் எழுதிய கவிதைவரிகளின் பிரகாரமும் பொப்பிப் பூக்களை இந்நாடுகள் இந்த வீரர்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தன.

ஆனால் பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. எனவே கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் முடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இவர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்த வர்கள் என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுகின்றனர். மாறாக கடந்த சில ஆண்டுகளாக இலண்டனுக்குள் வெளி நாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் இலண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடி க்கப்படுகிறது. மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

அதில் சிறப்பம்சம் என்ன வெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 35,527 அவுஸ்தி ரேலிய வீரர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் ((Western Front)) புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலே 35,527 வீரர்களின் நினைவு களுக்கும் சாட்சி.

அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீரர்களின் நினைவுதினமான கார்த்திகை 27ம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுதின விழா ஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங் கள் ஆராயப்படவேண்டியவையே. அதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக் கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்ல மையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும்தான் பிரகடனப் படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீரர்கள் தினமாகக் கொண்டாடி வருவத னைக் காணலாம்.

இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த ககானா என்கின்ற விடுத லை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர். 450 ஆண்டுகளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்தது. அந்த நாள் இன்றும் சுதந்திர தினமாக இல்லாது விடு தலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சி யுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம்.

ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக் களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொங் படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 தினத்தை வியட்நாமின் தேசிய வீரர்கள் தினமாக கொண்டாடி வருகின் றனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளு டனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களை நினைவு கூருகின்றது. அதே போல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீரர்களை தவறாது கௌரவித்து நினைவு கூரு வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுதந்திரம் வேண்டிப் போராடிய சில அமைப் புக்கள் மற்றும் நாடுகள் உலகளாவிய ரீதியில் வீழ்ந்த வீரர் களுக்கு மரியாதை செய்யும் தினங்களைப் பற்றி நோக்கினோம்.



இனி தமிழீழ சுதந்திரத்தை அடிநாதமாகக் கொண்டு அதற்கான சுதந்திரப் போரை முன்னிறுத்தி அதற்காக தங்களுயிர்களை தியாகம் செய்த வேங்கைகளின் வீரத்திரு நாளான மாவீரர் தினத்தினைப் பற்றி நோக் குவோம்.

ஏரிநட்சத்திரங்களாக விடுதலையின் விடி வெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக்கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினை வுகூரும் நாள் கார்த்திகை 27.

கார்மேகம் கார்த்திகை யில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்க ளின் கால்கள் நனைக்கும் நாள். ஈடினையற்ற ஈகங் கள் புரிந்து அளப்பரிய அற்புதங்கள் செய்து மயிர்கூச் செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீரர்களின் வீரத்திருநாள் கார்த்திகை 27.

சங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீரர்களை புதைத்து அவர் களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்க முறை காணப் பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது.

தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள். போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானுற்றில் பரவலாகக் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததனை இலக்கி யங்கள் சான்றாகிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது. அந்தவகையில் மீண்டும் ஒரு புறநானுற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலை ப்புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும்.

உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக் குழந்தைகளுக்கு வீரத்தாலாட்டு ஈழத்தமிழ் மண்ணிலே சிறப்பாக இடம்பெறுகிறது. இற்றைக்கு 2500 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்தி ரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ. அத்துடன் போரில் மாண்ட வீரர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான் என்று, சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருக்கின்றோம்.

அன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதே போல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்ககாலப் பாடல்கள் பலவும் இவ்வீரர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. முதன்முத லில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

1989ம் ஆண்டு 1617 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக் குள்ளும் நள்ளிரவு 12.01ற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத் திலே மாவீரர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீரர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதை குழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறை கள் எழுப்பப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச் சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாக வும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதரர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோதரர்களுக்கு எதைக்காட்டப் போகின் றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதரர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா. ஆகவே வீரமரணமடையும் மாவீரர் களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது, புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.

இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிண ங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் அறிவித் தார்கள்.

அந்தவகையில் 1991ம் ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டன. அந்த 1991ம் ஆண்டில் 3750 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீரர் நாளில் புதுவை இரத்தினதுரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீரர்கள் கௌரவிக்கப்பட்ட னர்.

பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை மாவீரர் தினம் அனுட் டிக்கப்படுவதுதோடு முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 ற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத் தக்கது. 1998ம் ஆண்டு 14.435 மாவீரர்களுக்கு நினைவு கூரப்பட்டது. கடந்தவருடம் 19.887 மாவீரர் களுக்கும் இந்தவருடம் 21,400 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீ ரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்புகிறது.

இந்த நாளில் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ தூவி வணங்குகின்ற மரபு காணப்படுகிறது. வல்லரசான பிரித்தானியா நவம்பர் 11 இல் பொப்பி மலர் வைத்து வீழ்ந்த வீரர்களை வணங்கு கின்றனர். ஆனால் விடுதலை வேண்டிப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் கார்த்திகைப் பூத் தூவி வணங்குகின்றனர்.


சங்ககாலத்தில் இருந்து இம்மலர் காந்தள் மலர் என அழைக்கப்பட்டு வந்திருந்தமையைக் காணமுடிகின்றது. இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். அத்துடன் லில்லி ஆசியே எனப் படும் தாவரவியல் போர் கொண்ட கார்த்திகைப் பூவானது நச்சுத்தன்மை வாய்ந்தது. இதை உண்பவர்கள் உடனடியாக மயக்கமுறுவதோடு எதிர் காலத்தில் தலைமுடி உதிர்வையும் ஏற்படுத்தும் கொல்கிசைன் என்ற நச்சுப்பொருள் கொண்டது.

இப்பூவானது எவ்வாறு ஒரு விசேட தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ, அதே போலவே கழுத்தில் நஞ்சைக் கட்டிக்கொண்டு களப்பலியாகிய மாவீரர்களும் தமக்குள்ளே ஒருவிசேட தன்மைகளைக் கொண்டுள்ளனர். தமது வாயிலிருந்து விடுதலைப்போர் பற்றிய எதுவித உண்மைகளும் தெரியவரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன். பாலன். சயனைட் உண்டு வீரகாவியமான மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள் ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள். தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தக மாக்கி வெடித்து உயிர் நீத்த கரும்புலிகள், எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத் தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீரர்கள். தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், வியட்நாமின் வியட்கொங் படைகளை வழிநடத்தி அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபுவழிப்போராக மாற்றிய பிரிகேடியர் பால்ராஜ் ஆகியவர்கள் அனைவரும் கார்த்திகை பூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்கள்.

பொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீரர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக கிளர்ச்சி மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காவில் இறந்த வீரர்களை நினைவு கூருவதை பொது வாகக் காணமுடிவதில்லை. ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்ட 58,132 அமெரிக்க வீரர் களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் நினைவு நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவு சின்னத்திற்கு அருகில் 75 மீற்றர் உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நா மில் இறந்த 58,132 அமெரிக்க வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன.

இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன. அத்துடன் தாம் கிளர்ச்சி மூலம் கைப்பற்றி வெற்றி பெற்ற அந்நாளை மட்டும் அவை கொண்டாடி மகிழ்கின்றன. ஆகவே உலகத்தில் காணப்படுகின்ற விடுதலை அமைப்புக்கள் எல்லாம் ஒரு நாளை மட்டும் ஒதுக்கி அவர்களுக்காக பொதுவான தீபத்தினை ஏற்றுகின்றது. அத்தோடு தனித்தனிக் கல்லறைகளையும் அவை அமைப்பதில்லை பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கின்றன. ஆனால் பிரித் தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீரர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்தது உதாரணமாக பிரான்சில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தா னிய வீரர்களுக்கும் தனித்தனி கல்லறை அமைத்ததையும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் ((postmouth) எனுமிடத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மியூசியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்துக் கௌரவித்ததையும் குறிப்பிடலாம்.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இறந்த இந்திய வீரர்களை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல முடியதாவிடத்து தமிழர் தாயகத்தில் புதைத்தனர். அதை இன்றுவரை அழிக் காது தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாக்கின்றனர். ஆனால் இன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழீழ விடுத லைப் புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படு கின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். எனினும் ஆயிரம் ஆயிரம் மாவீரர் களின் கல்லறைகளில் இம்முறை தீபங்கள் ஏற்றமுடியாது.

எனவே உங்களுக்காக எங்கள் இதயங்களில் தீபங்கள் எரியும் நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.

அ.மயூரன் - இலண்டன்

ஈழமுரசு (29 நவம்பர்)



0 comments:

Blog Archive