Saturday, January 31, 2009

வீரச்சாவு முத்துக்குமார்

போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை...

Thursday, January 29, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

எல்லோரையும் ஈர்க்கக்கூடிய கார்த்திகாவின் ஆளுமை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியில் சந்தித்தபோது 2ஆம் லெப்.மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் யாழினியைக் கவர்ந்தது. க.பொ.த (உ/த) இல் விஞ்ஞானம் பயின்ற கார்த்திகாவுக்கு பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருந்தது.

எல்லாவற்றையும் அறிந்து கொண்ட யாழினி, பயிற்சி முடித்து படையணிக்கு வந்தவுடன் அவரை மருத்துவம் பயில அனுப்பினார். அடிப்படை மருத்துவம் பயின்ற கார்த்திகா நெருக்கடியும் சவாலும் நிறைந்த உயிலங்குளம் முதல் கட்டுக்கரை வரையிலான மிக நீண்ட போர் முன்னரங்கப் பகுதியில் பணியாற்றினார். கொஞ்ச நஞ்சத் தூரமில்லை அது.

காப்பரண்களில் தொடர் கண்காணிப்பு, காப்பரண்களிடையே தேடுதல், உணவு எடுப்பதற்கும் கொடுப்பதற்குமான தொடர்நடை, குடிநீர் எடுப்பதற்கும் குளிப்பதற்குமான தொலைவுப் பயணங்கள், தொடர் சண்டைகள் என்று காவலரணில் நிற்போர் கடும் வேலைகளில் நிற்பதால், உதவிக்கு எவரையும் கூப்பிடாமல் பெரும்பாலும் தனியாகவே இந்தத் தொங்கலிலிருந்து அந்தத் தொங்கல் வரை கார்த்திகா போய் வந்தார்.

நாள் தவறாமல் குறிப்பிட்ட ஒரு ஒழுங்கில் கொம்பனியின் எல்லா உறுப்பினர்களையும் சந்தித்தார். எல்லோர் நலனையும் கவனித்தார். மருந்துகள் கொடுத்தார். ஒரு புதிய போராளி என்று அவரைப் பார்த்தவர்களால் சொல்லமுடியாது. பட்டறிவு கொண்ட தேர்ந்த மருத்துவராகவே அவர் நடந்து கொண்டார். கார்த்திகா தனது மருத்துவ மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் காயம் சாதாரணமானது.

ஆனால் அது தொடர்பாக அவர் அதிக கவலை கொண்டுள்ளார். அவருக்கு நான் இந்தச் சிகிச்சையே செய்கின்றேன் என்றும், காப்பரண் ஒன்றில் நின்ற மூவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் சளிக்கு நான் இந்த மருந்தைக் கொடுக்கின்றேன். ஆனால் அவர்களுக்குச் சளி கடுமையாக இருப்பதால் காய்ச்சல் வரலாம் என எதிர்பார்க்கின்றேன்.

எனவே அவர்களுக்குக் கொடுப்பதற்கு இந்த இந்த மருந்துகள் மேலதிகமாக வேண்டும் என்றும் எழுதிய கார்த்திகாவின் கடிதத்தைப் பார்த்தால், கொம்பனியை நேரே போய்ப் பார்க்காமல் எவருக்கும் எல்லாம் விளங்கும். களமுனையில் நின்று கார்த்திகா எழுதிய கடிதம் பல கைகளைக் கடந்து யாழினியின் கைகளுக்கு வந்தபோது, கார்த்திகா விழி மூடிப் போயிருந்தார்.

மிக நல்ல போராளியை இழந்த துயரம் கொம்பனியை வாட்டியது. அருமை மகளை இழந்த துயர் அன்னையை வாட்டியது. எனினும் வீடு தேடி வந்த போராளிகளை அவர் இரு கை நீட்டி அழைத்தார். "என்னைப்போல ஆரோ ஒரு தாய் பெத்த பிள்ளையள் தானே நீங்களும். வீட்டுக்கு வாற போராளிகளை நல்லாக் கவனிக்கவேணும் எண்டுதான் எனக்கு வந்த கடிதங்களிலை யெல்லாம் பிள்ளை எழுதினது" என்று அழுது ஆறிய அன்னையின் கரங்களைப்பற்றினர் போராளிகள்.

அம்மாவின் நல்ல மகளாக, படையணியின் நல்ல போராளியாக வாழ்ந்த கார்த்திகாவுக்காக அவர்களின் தலைகள் குனிந்தன. நிலமட்டத்தோடு ஒரு வகைப் பற்றைகள், ஏறத்தாழ நான்கு அடிகள் உயரத்தில் இன்னொரு வகைப் பற்றைகள், அதற்குச் சற்று உயரமாக மரங்களைக் கொண்ட காடு, கோயில் மோட்டைக் காடு. விண்ணைத் தொடுகின்ற உயர்ந்த காடு இல்லை. எனினும் மனிதரின் கண்ணை மறைக்கின்ற காடு.

நிலமட்டத்தோடு கண்ணை வைத்துப் பார்த்தாலும் எதுவும் தெரியாது. ஆள் பலம் கூடிய சிங்களத்துப் படைகளுக்கும் மனோ பலம் கூடிய தமிழர் படைகளுக்குமிடையே கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றது மன்னாரின் கோயில் மோட்டைக் காடு. அடி விழ விழ விழ, அசையாமல் நிற்கின்ற விடுதலைப் புலிகளின் காப்பரண்கள் எப்போதுமே எதிரிக்குப் பெருஞ்சவால்.

"மன்னாரிலை ஒட்டிக்கொண்டு ஏன் நிக்கிறீங்க? போங்களேன்" தாம் என்ன அடி அடித்தும், ஓரடி பின்னகர மறுக்கின்ற விடுதலைப் புலிகளை மேற்கண்டவாறு சிங்களப் படையினர் தொலைத்தொடர்புக் கருவியில் கேட்பது இப்போது ஒரு வழமை. காப்பரணின் முதுகுப் புறம் பின்னேகூடச் சிலவேளை சண்டை நடக்கும். வந்த படையினரை வழியனுப்பிவிட்டு முன்னே காப்பரண் முன்பிருந்தது போலவே இருக்கும். ஒரு கிளைமோர், இரு கிளைமோர்களையா சிங்களப்படை எங்களை நோக்கி நிலைப்படுத்தியுள்ளது? எப்போதாவது ஒருமுறை வாய்ப்புக் கிடைக்கும் வேளை குளிக்கப்போகும்போது குடிநீரைச் சுமந்து வரும்போது, இடங்கள் பார்க்கப்போகும் பொழுதுகளில் வெடிக்கின்ற கிளைமோர்களிலெல்லாம் தப்பிப் பிழைத்து, எவ்வகை நெருக்கடிக்குமேல் தம்மைத் தகவமைத்து சிங்களத்துக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்தபடி மன்னாரில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ளார்கள்.

கோயில்மோட்டை என்று எழுதப்பட்ட பெயர்ப் பலகையொன்றைக் கண்ட 2ஆம் லெப்.மாலதி படையணிப் போராளி அதில் ஒரு திருத்தம் செய்தார். அதன்படி இப்போது அவ்விடத்தின் பெயர் "கிளைமோர் மோட்டை". கோயில் மோட்டைப் பகுதிப் போர் முன்னரங்கில் புதிய காப்பரண்களை அமைக்கும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. 2ஆம் லெப்.மாலதி படையணியினருக்கான காப்பரண்களை வெட்டுவதில் ஆண் போராளிகளின் கள மருத்துவர் அணியொன்று வேறிடத்திலிருந்து மன்னாருக்கு வந்து உடனிருந்து உதவிக் கொண்டிருந்தது. கலைப்பிரியாவின் அணிக்கான காப்பரணை கலைநிலவனின் அணி இணைந்து வெட்டிக்கொண்டிருந்தது.

ஆடிப் பாடி வேலை செய்தால் களைப்பிருக்காது. ஆனால் எவரும் ஆடவுமில்லை. பாடவுமில்லை. எனினும் கலகலப்புக்குக் குறைவில்லை. 2008.02.05 அன்று ஆண் போராளி ஒருவரின் பிறந்தநாள் கேக் வெட்டுகின்ற சிந்தனையே எழாமல் காப்பரணை எல்லோரும் வெட்டிக் கொண்டிருந்தனர். அவருக்கான பிறந்தநாள் பரிசைச் சிங்கள நண்பர்கள் கொண்டுவந்து தருவார்கள் என்று கலைப்பிரியாவின் அணி உளம்நிறைய வாழ்த்தியது. ஆனால் மாலைவரை அவரை வாழ்த்த வேறெவரும் வரவில்லை.

கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தூயவள் மாலை 5.00 மணியளவில் தனக்கு முன்புறம் எழுந்த வேறுபாடான ஓசைகளை உணர்ந்து, அணியினரை எச்சரித்தார். எல்லோரும் வேலையை நிறுத்தி செவிகளை நீட்டினர். இவர்களிலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது மீற்றர்கள் முன்னால் எழுந்த ஓசைக்கு உரித்துடையோர் பன்றிகளா? வேறேதும் விலங்குகளா? அல்லது... தடிகள் வெட்டப்படும் ஒலிகள் இப்போது தெளிவாகக் கேட்டன. அந்த ஒலிகள் மெல்ல மெல்ல நெருங்கி நூறு மீற்றர்களளவில் வந்தபோது சிங்களத்தில் உரையாடல்கள் கேட்டன. அப்பாடா. பரிசுப் பொதிகளுடன் விருந்தினர்கள் இப்போதாவது வந்து சேர்ந்தார்களே.

வந்த படையினரில் சிலர் மரங்களை வெட்டி அடுக்கிக் கொண்டிருக்க, பத்துக்கு மேற்பட்டவர்கள் கலைப்பிரியாவின் காப்பரணை நோக்கி வரத் தொடங்க, அவர்களை விருந்தோம்ப விடுதலைப் புலிகள் தயாரானார்கள். சிங்களப் படையினர் ஐம்பது மீற்றர் எல்லைக்குள் வந்ததும் கலைப்பிரியா சுடத் தொடங்க, சண்டை தொடங்கியது. அவ்விடத்தில் விடுதலைப் புலிகளை எதிர்பார்க்காத சிங்களப் படையினர் மரங்களில் காப்பெடுத்து ஐந்து பீ.கே.எல்.எம்.ஜி.களால் இவர்களைச் சுடத் தொடங்கியபோது நேரம் மாலை 5.20. அந்தக் காப்பரணில் நின்ற ஒன்பது போராளிகளுக்கும் ஐம்பதுக்கும் குறையாத சிங்களப் படையினருக்குமிடையே கடும் சண்டை நடந்தது. காப்பரணுக்கு வெளியே படுத்திருந்து சுட்டுக்கொண்டிருந்த பரந்தாமன் தன் சுடுகலனில் இயங்குநிலைத் தடை ஏற்பட்டதும் உள்ளே வந்தார்.

உள்ளே காப்பரணின் ஒருபுறம் தூயவள், குயிலினி, உதயகீதன், மறுபுறம் கலைப்பிரியா, கலைநிலவன், பரந்தாமன், நடுவே குகப்பிரியா, எழில் நின்று சாதாரண சுடுகலங்களால் எதிரிகளுக்குச் சமமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர். எதிரிகளின் அடர்த்தியான பீ.கே.எல்.எம்.ஜி சூடுகளால் மரங்களின் கிளைகள் முறிந்து பறந்து விழுந்து கொண்டிருந்தன. சில சுடுகலங்களில் இயங்குநிலைத் தடை ஏற்பட, பலரிடம் ரவைகள் முடிவடைய, நிலைமை சிக்கலானது. காப்பரணின் ஒருபுறம் நின்றவர்கள் தம்மை நோக்கி எதிரி யின் பீ.கே.எல்.எம்.ஜி உதவியாளர் ஒருவர் நெருங்கி மரமொன்றில் காப்பெடுத்ததைக் கண்டனர். அந்தப் பக்கம் நின்றவர்களில் உதயகீதனும் பரந்தாமனும் ஆளுக்குப் பத்து ரவைகளுடனும் மற்றவர்கள் ரவை முற்றும் முடிந்ததால் குண்டுகளுடனும் நின்றனர்.

பரந்தாமனின் பத்து ரவைகளையும் உதய கீதனின் ரவைக்கூட்டில் ஏற்றிக் கொடுத்து உடனடி நிலைமையை குயிலினி சமாளித்தார். உதயகீதன் சுட்டபோது மரக் காப்பில் மறைந்து நின்ற பீ.கே.எல்.எம்.ஜி உதவியாளர், சூட்டை அவர் நிறுத்தியபோது தன் கையில் குண்டை எடுத்ததை இவர்கள் கண்டனர். சண்டையில் எப்போதும் முந்துபவர் வெல்வார். முந்திக்கொண்டது உதயகீதனின் தமிழ் குண்டு. காயப்பட்ட பீ.கே.எல்.எம்.ஜி காரரை இன்னொருவர் தூக்கிக்கொண்டு ஓட, மரங்களுக்கு மேலாக இருவரையும் தேடிப்போனது இன்னொரு தமிழ் குண்டு. சுடுகலங்களின் இடத்தைக் குண்டுகள் நிரப்பியபோது பீ.கே.எல்.எம்.ஜி.கள் பின்வாங்கிக் கொண்டிருந்தன.

மாலை 6.00 மணிக்குச் சண்டை ஓய்ந்த போது தூரத்தே காயப்பட்ட சிங்களப் படை யினரின் முனகல்கள் தேய்ந்து மறைந்தன. அட! வந்தவர்களுக்கு ஒரு வாய் தேநீர் கொடுக்காமற்போனோமே. வறள் வலயம் என்று புவியியலாளர்களால் குறிப்பிடப்படுகின்ற மன்னாரில் ஒரு அழகிய கிராமத்தைக் காட்டுகின்றோம் பாருங்கள். எங்கள் கைகளைப்பற்றி, எம் காலடி மேல் கால் வைத்துக் கவனமாக வாருங்கள். பண்டிவிரிச்சானின் அழகு தெரிகின்றதா? சிறியதும் பெரியதுமாக மண்ணாலோ சிமெந்தாலோ அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப கட்டப்பட்ட அழகிய அடக்கமான தனித் தனி வீடுகள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் தனியான கிணறுகள். ஆனால் ஒவ்வொரு வீட்டுக் கிணற்றிலும் நீர் வெவ்வேறு மட்டங்களில் நின்றது. எல்லோருடைய வீடுகளிலும் வீட்டுப் பயிர்கள் சிரித்தபடி நிற்கின்றன. பலருடைய வீடுகளில் உழுபொறி நின்ற தடங்கள் தெரிகின்றன. சொந்தப் பலத்தில் நிமிர்ந்த வாழ்வு வாழ்ந்த இந்தக் கிராமத்தின் குடிகள் இப்போது தாழ்வாரங்களின் கீழ் ஒண்டியபடி, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இடைக்காலக் குடில்களில் குந்தியபடி வீடு திரும்புவதற்காகக் காத்திருப்பார்கள் என்பதை நினைக்க வயிறு எரிந்தது. வீட்டுச் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் முதுமக்களின் நிழற்படங்கள் எம்மை வரவேற்கின்றன.

வீட்டின் உள்ளே போய் நின்றால் அது வரட்சி மிகுந்த மன்னார் என்பது நினைவில் வரவே வராது. ஏறத்தாழ யாழ்ப்பாணத்தின் பலாலியை ஒத்த வளம் மிகுந்த மண்ணும் சோலையால் மூடப்பட்ட வீடுகளுமாக அழகு பூத்திருக்கின்றது பண்டிவிரிச்சான். லெப்.இளவதனாவின் காவலரண் பண்டி விரிச்சானிலிருந்தது. அடிக்கடி சிங்களப் படையினர் பண்டிவிரிச்சானில் முன்னேற்ற முயற்சிகளைச் செய்திருந்தன. இளவதனாவின் காப்பரண் மட்டும் பலதடவை தொல்லைப்படுத்தும் தாக்குதல்களையும் மூன்றுமுறை பெருஞ்சண்டைகளையும் சந்தித்திருந்தது என்றால், ஏனைய காப்பரண்கள்..? சண்டையென்றால் தலை பறக்கின்ற சண்டை.

காலையில் தொடங்கினால் மாலை, சிலவேளை இரவுவரையும் சண்டை தொடரும். மூன்றாவது பெருஞ்சண்டையின் போது, சிங்களப் படைகளை எதிர்பார்த்து நிலைப்படுத்தப்பட்டிருந்த கிளைமோரை இளவதனா இயக்க அது வெடிக்க மறுத்துவிட்டது. ஒரு கணப்பொழுது நாம் தாமதித்தாலும் எதிரியின் கை மேலோங்கிவிடும். கணப் பொழுதுக்குள் இளவதனா முடிவெடுத்தார்.

கிளைமோருக்குரிய மின்கலத் தொகுதியை அகற்றிவிட்டு, தன் தொலைத்தொடர்புக் கருவியின் மின்கலத் தொகுதியால் மின்னிணைப்புக் கொடுத்து கிளைமோரை இயக்கினார் அது வெடித்தது. மூன்றாவது முறையும் வந்த நோக்கம் சிதைந்து, சிங்களப் படைகள் திரும்பிப் போயின.

வீரச்சாவு லெப்.கேணல் ஈழப்பிரியன்

வீரச்சாவு லெப்.கேணல் இசைக்குயிலன்

வீரச்சாவு லெப்.கேணல் காந்தன்

போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி


கண்ணீர் அஞ்சலி
எமக்காக உயிர்துறந்த உறவுக்கு


விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள்.

இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?

பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.

அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.

உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள்.

உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள்.

உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.

எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..

உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும்.

நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?

எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்?

உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான்.

இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது.

உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...

இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள்.

மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே...

ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்.

புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்?

இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.

இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா?

சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல...

இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...

எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே.

ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்.

நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


Monday, January 12, 2009

உயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு!

தமிழீழ விடுதலைப் போராட்டம் பல ஆற்றல்மிகு போராளிகளை இனங்காட்டி இருக்கின்றது. சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்கியிருக்கின்றது.

தலைமைத்துவப் பண்புள்ளவர்களை இனங்ககண்டு அவர்களைப் பயன்படுத்திப் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த வரிசையில் அனைத்துத் துறைகளிலும் ஒரு சேரப் பிரகாசித்தோர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் கேணல் கிட்டு.

'எதனைச் செய்வதானாலும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும்" என்ற கோட்பாட்டைக் கொண்ட அவர், வாழ்ந்த போதும் தனது வாழ்வை முடித்துக்கொண்ட இறுதிக் கட்டத்திலும் தனக்குத் தரப்பட்ட பணியை நேர்த்தியாகச் செய்து முடித்தவர்.

அடிமட்டப் போராளியாக தனது 18 ஆவது வயதில் விடுதலைப் பயணத்தை ஆரம்பித்த அவர் ஒரு பயிற்சி ஆசிரியராக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக என ஒரு குறுகிய காலத்திலேயே தனது திறமையை நிரூபித்துக் கொண்டார்.

விடுதலைப் போராட்டம் பரிணாம வளர்ச்சி கண்ட காலத்தில் கேணல் கிட்டு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

பல்வேறு கெரில்லாத் தாக்குதல்களில் பங்கு கொண்டு தனது மன உறுதியையும், திறமையையும் நிரூபித்த அவர், 1985 இல் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த படையினரை முகாம்களுக்குள் முடக்குவதில் வெற்றி கண்டார்.

சகோதர இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் அவரது போராட்ட வாழ்வில் விமர்சனத்துக்குரிய ஒரு அத்தியாயமாக அமைந்திருந்த போதிலும் முன்னாள் போராளிக் குழுக்களின் பிற்காலச் செயற்பாடுகள் அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப் படையினரை முகாம்களுக்குள் முடக்கியமை தமிழர் போராட்டத்தில் மக்களைப் பாதுகாக்கக்கூடிய திறன் போராளிகளுக்கும் உள்ளது என்ற செய்தியைக் கூறியதென்றால் அதனைத் தொடர்ந்து அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிர்வாகம் போராளிகளால் ஒரு தனியரசை நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

தொடர்ந்து வந்த காலங்களில் அவர் வித்திட்ட போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான உறவு இன்று வரை பிரிக்க முடியாத ஒரு உறவாக இருப்பதைக் காணலாம்.

தாக்குதல் சம்பவங்களே ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து வந்த காலகட்டத்தில் நடிகர் விஜய குமாரதுங்க உள்ளிட்ட குழுவினரின் யாழ். வருகை, கைதிகள் பரிமாற்றம் என பல விடயங்களூடாகவும் ஊடக அவதானத்தைப் பெறுவதில் கிட்டு வெற்றி கண்டார். அது மட்டுமன்றி, இத்தகைய செயற்பாடுகள் ஊடாக தமிழர் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.

இந்தியப் படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் சிகிச்சைக்காக
இந்தியா சென்றிருந்த அவர், மோதல்கள் உருவானதன் பின்னர் மோதலுக்கான காரணத்தையும் தமிழர் தரப்பு நியாயத்தையும் வெளிக்கொணர மிகவும் பாடுபட்டார். இந்தச் செயற்பாடுகளின் போது இந்திய நடுவண் அரசு அவரை மிகவும் துன்புறுத்திய போதிலும் கூட அவற்றை மிகவும் இலாவகமாக எதிர்கொண்டு தன்னுடைய குறியை அடைவதில் சிரத்தையுடன் செயற்பட்டார்.

90 இல் இலண்டனுக்குச் செல்ல வேண்டிய பணி தரப்பட்ட போது அதனைக்கூட சிறப்பாக ஏற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அதிகம் படித்திராத போதிலும் வாசிப்புக்கு ஊடாகத் தன்னை வெகுவாக வளர்த்துக் கொண்டிருந்த அவர் சர்வதேசப் பரப்புரைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தவற்றை அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் இன்றும் கூட நினைவில் இருத்திச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தனது வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்காகவே செலவிடப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவருக்கு அந்த வாய்ப்பும் கிட்டியது.

;~குவேக்கர் பீஸ்| என்ற அமைப்பின் செய்தியோடு சமாதானத் தூதுவனாக தாயகம் திரும்பிக்கொண்டிருந்த போது அவரது கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. தான் எதற்காகச் செல்கிறேன் என்பதை அவர் விளக்கிய போதிலும் கூட அதனை ஏற்றுக் கொள்ளாத இந்தியா நயவஞ்சகமாகக் கப்பலையும் அதில் பயணம் செய்த பத்துப் போராளிகளையும் கைது செய்ய முயன்றது.

உயிரைவிட மானத்தைப் பெரிதாக நினைக்கும் போராளிகள் தமது கப்பலை வெடித்துச் சிதறச் செய்து தமது உயிர்களைத் தியாகம் செய்து கொண்டனர். இதற்கூடாக தமது உறுதியை வெளிப்படுத்தியது மட்டுமன்றி இந்தியாவின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தினார்.

ஒரு போராளியாக, நல்ல நண்பனாக, சகோதரனாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக சேவகனாக, இராசதந்திரியாக, புகைப்படக் கலைஞனாக, இறுதி வரை உறுதி குலையாதவனாக கேணல் கிட்டு வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொரு போராளிக்கும் முன் மாதிரியானது எனக் கூறினால் மிகையாகாது.

-சண் தவராஜா-

நிலவரம் (09.11.09)

கேணல் கிட்டு



Wednesday, January 7, 2009

விடுதலை தீப்பொறி காணொளிகள்









































Monday, January 5, 2009

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

மிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை' வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!

"பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா'-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு' என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்' -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்' குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்' இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(A Social History of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில்FONKARA - FONKARA - என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க - பொங்கஅரிசித் தவிடு பொங்க - பொங்க -என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க' என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில்‘HONGA-HONGA' என்றே பாடுகிறார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

"சித்திரை வருடப்பிறப்பு" என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது..... ........ (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!

"தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!"

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை' ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்!

இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.

பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

"பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி" - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

"இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்"- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி' (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது.

அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்' என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன.

இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன.

முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன.

சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

- சபேசன் (மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா)

இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)

தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்



இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது பலவிதமான இன்னல்கள், இடையூறுகள் மத்தியிலும் சில நினைவுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சட்டத்திற்கு அடிபணிந்து சட்டத்தின் வாயலுக்கு பயமுற்று பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயம் காரணமாக மறந்தும் விடுகிறார்கள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவாக இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பல நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நினைவு மலர்கள் பல வெளிவந்துள்ளன என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் வெளிநாடுகளில் வெளிவந்த நினைவுரைகளின் ஒரு சில பகுதிகளை வெளிப்படுத்துவது மாமனிதருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.

புகழ்மிக்க வாழ்க்கை! திரு.பழ.நெடுமாறன், தென் செய்தி வெளியீடு, சென்னை

புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து "இவன் தந்தை எந்நோற்றான் கொல்' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார். தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

சிங்கள இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார். அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும்.

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார். செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். சிறைகளில் சித்திரவதை, கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல், சட்டவிரோதமான படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றம், இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார்.


இதன் விளைவாக சந்திரிகாவின் கடுங்கோபத்திற்கு ஆளானபோதிலும் இறுதிவரை உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும் யாருக்கும் அஞ்சாமலும் தமிழர்களுக்காகத் தொண்டாற்றினார்.

அமெரிக்க பிரமுகர்கள் கண்டனம்

அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான சுயி.டபிள்யூ.கெல்லி, நிரா.எம்.லோவே, பில்.பாங்கெரல், பிராட் ஷெர்மன், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் இவான்ஸு ஆகியோரும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சுதந்திர மையம், மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு ஆகியவையும் தமிழ்த் தலைவர் குமார் பொன்னம்பலம் படுகொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர்.

பொன்னம்பலம் என்றுமே வாழ்வார்

ஆங்கிலத்தில் வெளிவந்த நினைவுரையின் மொழிபெயர்ப்பு

மர்மமான துப்பாக்கிதாரிகளால் சுடப்படவேண்டியிருந்ததானது குமார் பொன்னம்பலத்திற்கு இந்த வேளையில் எள்ளளவும் எதிர்பார்க்கப்பட்டிராத செய்தியாகும். ஏனெனில், குறிப்பாக அவர் தனது நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான காலகட்டத்திற்கும் மிகப்பிந்திய காலத்திலேயே இது நிகழ்ந்தது.

தலைகவிழ்ந்து மரணித்த நிலையில் இருக்கும் பொன்னம்பலத்தின் படம் எமது மனங்களில் எப்போதுமே பதிந்திருக்கும். ஆனால் நாம் அறிந்துள்ள குமார் பொன்னம்பலமோ எமது அலுவலகங்களில் பிரவேசித்து அனைவருடனும் ஏன் ஒவ்வொருவருடனும் கூட சிநேகபூர்வமாக அளவளாவும் குமார் பொன்னம்பலமாகத் தானிருப்பார்.

தீங்கே தராத, அன்பு நிறைந்த, இரக்கம் நிறைந்த மனிதர் ஒருவரின் சோகமான முடிவு அது.

அவர் கொல்லப்படவேண்டுமென விரும்பிய அவருக்கிருந்த இந்தக் கசப்பான எதிரி யார்? அதை எமக்கு நினைத்துப் பார்க்கவே இயலாதுள்ளது.

செய்தியாளர்களுக்குக் குமார் பொன்னம்பலம் ஒரு இரட்சகர். ஏனெனில் எவருக்கும் செய்திப் பஞ்சம் ஏற்படுவதுண்டு. ஆனால் குமாருடன் ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கவலையெல்லாம் ஒழிந்துவிடும். பல விடயங்களில், குறிப்பாகச் சிறுபான்மையினர் விடயங்களில் குமாரின் கண்ணோட்டங்கள் மிக ஆழமானதாகவும் இருந்தன. ஆனால் வனப்பு மிக்க அவரது ஆளுமையிலிருந்து வெளிப்படும் மேற்கோள் ஒன்றின் காரணமாகச் செய்தியின் பிரதி எப்போதும் மகிழ்விப்பதாகவே இருக்கும்.

மனித முகங்களை மறக்காதவர் குமார். அவர்களிடமிருந்து செய்தியொன்றைப் பெற்றுக்கொண்ட புதிதாய் நியமனம் பெற்ற, அனுபவமில்லாத ஒரு செய்தியாளர் கூட அடுத்த தடவை குமாரைச் சந்திக்கும் போது அடையாளம் காணப்பட்டதன் அறிகுறியாக இலேசான ஒரு புன்முறுவலை நிச்சயமாக அவரிடம் காணலாம். உறவு வளர்ந்து வருகையில் குமாரே பல செய்திகளுடன் பெரும்பாலும் புத்தகங்கள் பற்றிய விளம்பரச் செய்திகளுடன் தொலைபேசியில் அழைப்பார். அவர் கூறும் விடயங்கள், செய்தியாளர் விவேகமானவராயிருந்தால் நன்கு பயன்படும்.

1980களின் பிற்பகுதியில் குமார் தனது இறுதிக்காலத்தில் காணப்பட்டதை விட வேறுபட்ட ஒரு நபராகக் காணப்பட்டார். இறுதிச் சில வருடங்களின் போது நிச்சயமாக இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவரெடுத்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தோன்றிய வெறுப்புணர்வொன்று அவரிடம் காணப்பட்டது. 1980களின் பிற்பகுதியில் அரசியல் முன்னேற்றம் கருதி அவர் எடுத்த முயற்சிகள் தோல்விகண்ட போது, தான் ஆதரிக்கும் அரசியல் சித்தாந்தம் இறுதியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு அத்தோல்விகளை அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டார்.

நம்பமுடியாத அளவு செல்வம் படைத்தவர் எனக் குமார் அறியப்பட்டிருந்தார். சில மேர்ஸிடஸ் வகைக் கார்களை அவர் சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும், அவரணிந்த தங்கக் கைச்சங்கிலியைத் தவிர, அவரது ஆடையணிகள் கிட்டத்தட்ட அக்கறை எடுத்துத் தேர்ந்து அணியப்படாத எளியனவாகவே இருந்தன. முன்னோடி வடிவமைப்புக்கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வருவதன் மூலமோ தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் ஒருபோதும் நாடவில்லை.

தமிழன் என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதே குமாரின் நோக்கமாக இருந்தது. வேட்டியொன்றை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறையும் அணிந்து கொள்வார் அவர். இராணி வீதியில் உள்ள தனது வீட்டின் மதிற்சுவர் மீது சுவாமி அறையொன்றை நிருமாணித்திருப்பதோடு தனது கடிதத் தலைப்பிலும் "ஓம்' எனும் அடையாளத்தைப் பொறித்திருந்தார் அவர். ஒரு வகையில் பார்த்தால் தனது தமிழ்த் தன்மையைப் பறைசாற்ற அவர் எடுத்த தளராத முயற்சிக்கே அவர் உயிர் விலையாகிப் போனது.

தன்னைக் கொலை செய்யக்கூடிய பகைவர்கள் தனக்கில்லையென்றே அவர் நம்பினார். தமது பிரதிநிதியாக இருக்கக் கூடிய அளவுக்கு அவரின் செயற்பாடுகளைப் புலிகள் தமக்குகந்தவையாக ஏற்றிருக்காவிடினும் புலிகளோடு அவர் "நல்லுறவையே பேணிவந்தார். அவரது கருத்துகளுக்காகத் தெற்கு அரசியல்வாதிகள் அவரைக் கொல்லப் போவதில்லையெனத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களுள் பெரும்பாலானோரைப் போதுமான அளவு நெருக்கத்தோடு அவர் அறிந்திருந்தார். அவரது அபிப்பிராயங்களைவிட்டு அவர்கள் அவரைப் பகிரங்கமாகத் திட்டக் கூடுமேயொழிய நிச்சயமாகக் கொல்ல நினைத்திருக்க மாட்டார்கள்.

பணமும் அந்தஸ்தும் இருந்தால்தான் அதிகாரம் வரும் என்று சொல்லக்கூடிய வேறொரு யுகத்தில் அவரது கூர்மதிக்குப் பொருந்திவரும் விதத்தில் அதிகார உயர் வர்க்கக் குழாமில் தனக்கெனத் தனியானதோர் இடத்தை அவர் பிடித்திருக்கக் கூடும். ஆனால் பாராளுமன்ற அரசியலின் இன்றைய முரட்டுத்தன்மை வாய்ந்த குளறுபடியான உலகத்தில் அவருக்கு இடமிருக்கவில்லை.

அவரது கருத்துகள் எதுவாயிருப்பினும், குமார் பொன்னம்பலத்தைப் போன்ற ஓர் அரசியல் வாதி பாராளுமன்றத்திற்கே அழகூட்டுபவராய் இருந்திருப்பார். மக்களின் செல்வாக்குக் கிடையாத விடயங்களுக்கு ஆதரவளிப்பவராக தோல்வியுற்ற விடயங்களுக்கு உயிரூட்டி முன்கொண்டு வருபவராக இருந்திருப்பார். கட்சியின் கைப்பாவையாகத் தரந் தாழ்ந்து போயிருக்கும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உயர்வாய் மதிக்கப்படுகின்ற ஒரு துடிப்பான நிறுவனமாக சட்டசபையை மாற்றியமைக்கும் தனிவழி செல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருப்பார்.

அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை

வ.வ. பாபு, ஒருங்கிணைப்பாளர், அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்

ஈழத்தமிழர் தலை நிமிர்ந்து நிற்க செயல்பட்ட தமிழரே! உம் இழப்பு ஈடு செய்ய இயலாதது! உம்மை அழித்தவர்கள் உம் உடலை மட்டுமே அழித்துள்ளனர். நீங்கள் தமிழ் இனத்திற்கு சிறப்பாக ஈழத்தமிழருக்கு செய்த சிறந்த பணியால் பெற்ற புகழையே அல்லது ஈழத்தமிழரிடையே நீங்கள் ஏற்படுத்திய தன்மான உணர்வை, சுதந்திர உணர்வை அவர்களால் எக்காலத்துக்கும் அழிக்க முடியாது. உங்கள் பெருமையும் புகழும் தமிழீழத்து தமிழர் என்பவரோடு மட்டுமல்லாது, உலக வாழ் தமிழர் மனமெல்லாம் என்றென்றும் எக்காலத்துக்கும் நிலைத்து நின்று வாழும் என்பதில் எந்தவிதமானஐயப்பாடும் இல்லை. அன்னார் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களது இழப்பு உலகத்தமிழர் இழப்பு!

மறைந்த தமிழ் மகாத்மாவுக்காக முன்னாள் தமிழ் அரசியல் கைதி

செங்கதிர் போல் ஒளி வீசிய செந்தமிழ் செல்வரே. தங்கத் தமிழ் மணியே, தரணியில் உதித்த வெண் நிலவே , தாய்க்கு இன்றும் குமார் பொன்னம்பலம் தமிழுக்கு என்றும் எங்கள் தமிழ் ஞானப்பல(ழ)ம்.

அடிமை விலங்கை உடைத்தெறிந்து என்றென்றும் அகிலம் போற்றும் சட்டத்தரணியாக நின்ற எங்கள் அன்பே உருவான இன்பத் தமிழ் தியாகியே! நீங்கள் ஆயுதம் ஏந்தாமல் படையின்றி தனியொரு மரமாய் அநீதிக்கெதிராக அசைந்தாடும் நாவால் சொல் அம்புகளால் அஹிம்சா வழியில் போர் தொடுத்த அற்புத தீரரே.

தமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல் , ஆவி, பொருள் எந்தனை உயர்வாக உன்னத தமிழுக்கு கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே! தமிழர்களின் தன்மானம் காத்த தகையே!

நீண்டதொரு தசாப்தமாக தமிழ் மக்களுக்கெல்லாம் நிழல்கொடுத்து நிமிர்ந்து நின்ற எங்கள் ஆலமரத்தை நிர்மூலப்படுத்தி விட்டனரே இனவாத நீசர்கள்.

பாடுபட்டு உழுதாலும் பார்தனில் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்த போதும் இடராமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே. நாடு கேட்டீர்கள் தமிழ் மக்களுக்கு சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்தமிழ் உரிமைக்காக.

பொன்னாடை விரும்பாத கண்ணான எம் தமிழ் மன்னா, கண்ணோரம் நீர் திரள நெஞ்சு கனம் தாங்காது விண்ணுலகம் மேவிய உங்கள் முன் விம்மலுடன் விதைப்பது. அச்சமில்லை அச்சமில்லை ஆயிரமாயிரம் அடி விழுந்தாலும் அண்ணலே தங்கள் பாதச் சுவடுகளில் பயணித்திடுவோமென அணையா எங்கள் கண்ணீர் அஞ்சலியை கவியில் வடித்து அரைக் காலம் கடந்து காணிக்கையாக்குகின்றோம் இன்று.

- தொகுப்பு கே.எம்.ரி.

Thursday, January 1, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

‘முடியுமானால் வந்து பார். எங்கள் வித்துடல்களைத் தாண்டியல்லாது நாமிருக்கும் வரையும் முடிந்தால் வந்துபார் பார்ப்போம்: என்று உறுதியுடன் காத்திருந்தனர் பெண்புலிகள் லெப்.இளமதியின் காப்பரணில் தான் தாரணியும் லெப்.தமிழ்மகளும் நின்றிருந்தனர். கடந்த ஆறுமாதங்களாக பழக்கப்பட்டுப்போன களமுனை என்பதனால் புளியங்குளம் தொடங்கி குஞ்சுக்குளம் வரையும் இவர்களுக்குத் தண்ணிப்பட்ட பாடம்.

அவர்கள் குளித்துப் பல வாரங்களாகிவிட்டன. அன்று நிலைமையைப் பார்த்துக்குளிக்க விடுவதாகப் பிளாட்டூன் முதல்வி மேஜர் சிவா கூறியிருந்தார். அரசியல்துறை மகளிர் அணி தாக்குதலணிப் போராளிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவள் சிவா. இருந்தாலும் அன்று அவளால் அவர்களைக் குளிக்கவிடமுடியாமல் போய்விட்டது. அந்த முன்னணி நிலை புற்கள் நிறைந்த வெட்டை வெளி. காப்புகளென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சில மரங்கள் இருந்தன.

காலாற நடந்துபோக எண்ணினால் அவர்கள் கட்டாயமாக குறிசூட்டுக்கோ, எறிகணைகளுக்கோ இலக்காக வேண்டியதுதான. அன்று காவற்கடமையில் நின்ற தாரணி படையினரின் நகர்வினைக் கண்டுவிட்டாள். அங்கிருந்து பீ.கே.எல்.எம்.ஜீ சுடுகலன்கள் ரவைகள், உந்துகணைகள், எறிகணைகள் என்று வலுவான சூடுகள் வர, இங்கிருந்தும் ரவைகளும் எறிகணைகளும் சீறிப்பாய்ந்தன.

முக்கால் மணிநேரம் மூர்க்கமாக முன்னேற முயன்ற சிங்களப் படைகளைத் தமக்கேயான தற்துணிவுடன் எதிர்த்து நின்றனர். புலிப்படைகள் இறுதியில் இளமதியின் நிலையைக் கைப்பற்ற முடியாமல், அவர்களின் குறிக்கும் கனவில் மண்ணைப் போட்டுவிட்டுப் பின்வாங்கிவிட்டனர் சிறிலங்காப் படையினர் வந்த இரண்டு நாட்களும் அமைதியாகக் கழிந்தது. கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அணிகளைக் குளிக்கவிட எண்ணி ய சிவா, அவர்களை மாற்றிவிட மதுமதியின் அணியினை அனுப்பினாள். இளமதியிடம் காவலரணைப் பொறுப்பேற்றுக்கொண்ட மதுமதி அவர்களைக் குளிப்பதற்கு அனுப்பினாள் மதுமதி இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பான தாகவே இருக்கும்.

ஒளிப்படப்பிரிவில் இந்து களப்பிடிப்பாளராகப் பல களங்கள் சென்று வந்தவள் இங்கே ஒரு காவலரண் முதல்வியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான களமுனைகளிலும் இயல்பாக நிதானமாக இருந்து செயற்படுவது இவளின் சிறப்பியல்பு. குளிக்கச் சென்ற அணியும் அவர்களுக்கான ஆடைகளைத் தலைமை மையத்திலிருந்து எடுத்து வந்த செந்தாவின் அணியும் சந்தித்துப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் அந்த நேரம் மதுமதியின் காவலரணில் சண்டை தொடங்கிவிட்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட சிவா சிறு அணியொன்றுடன் அவ்விடத்துக்கு விரைந்தாள். பாதுகாப்பான காப்புகளில் அனைவரையும் பிரித்து விட்டுவிட்டுத் தானும் ஒரு மரக்காப்புடன் நின்று கட்டளைகளை வழங்கிக் கொண்டு சண்டையிட்டாள்.

அந்த நேரம் சிவாவைக் குறிவைத்து ஏவப்பட்ட உந்துகணை சீறிவந்து வெடிக்க, அவளையும் காப்பரணையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்போடு எதிரிப்படைகளும் இரண்டையும் விடக்கூடாது என்ற உறுதியுடனும் சண்டையைத் தானே வழிநடத்த வேண்டும் என்ற பொறுப்புடனும் மதுமதி அணிகளை வைத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள். கைவசமிருந்த வெடிப்பொருட்களும் முடியும் நிலை. விழுப்புண்ணடைந்தவர்களின் சுடுகலன்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ரவையாகப் பார்த்துப் பார்த்து தேனெழில் சுட்டுக்கொண்டிருக்க, எந்தப் பதட்டமும் இல்லாமல் ‘மிக்சரை' மென்றபடி நிலைமையைக் கட்டளை மையத்துக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தாள் மதுமதி.

வல்வளைப்பாளர்களின் ரவைகளும் உந்துகணைகளும் எறிகணைகளும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. அந்தக்குண்டு மழைக்குள்ளும் இன்னுமொரு அணியினரால் இடையில் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் சிவாவின் வித்துடலையும் தமது காவலரணையும் விட்டுவிடக்கூடாது என்றஉறுதியுடன் ஆண் போராளிகளின் சிறிய அணியொன்றுடன் முன்னேறினர் இளமதியின் அணியினர். காவலரணில் இருந்து சில மீற்றர் தூரத்திலேயே தமிழ்மக்களும் இளமதியும் வீரச்சாவடைய, ஏனையோர் விழுப்புண்ணடைந்து வீழ்ந்தனர். விழுப்புண்ணடைந்தவர்களால் நகரமுடியவில்லை.

கையைத்தூக்கினாலோ, புல் அசைந்தாலோ ரவைகளும் எறிகணைகளும் அவ்விடத்தைக் குதறிவிடும். காவலரணைத் தக்க வைப்பதோடு வித்துடல்களையும் விழுப்புண் அடைந்தவர்களையும் அனுப்பவேண்டிய பொறுப்பும் மதுமதியினுடையது. அனால் வெடிபொருட்கள் வரும்வரையும் அவர்களால் தற்காப்புச் சூடுகளை மட்டுமே வழங்கமுடியும். குந்தியிருந்து கட்டளை மையத்துடன் தொடர்பை மேற்கொண்டிருந்த மதுமதியின் காலுக்குக் கீழ் எதிரியால் எறியப்பட்ட கையெறி குண்டு ஒன்று வந்துவிழுந்து வெடிக்க அவளும் விழிமூடிப்போக, கடுமையாக விழுப்புண்ணடைந்த தாரணியும் தேனெழிலும், மாமகளும் ஏனைய ஆண் போராளிகளும் ஊர்ந்து பின்னால் வந்து சேர, அந்தக் காவலரண் எதிரிப்படைகளிடம் விழுந்து போனது.

செந்தா அரசியல்துறை மகளிர் தாக்குதல் அணியின் மருத்துவப்போராளி. தேடுதல் அணியின் ஒருவராகத் தனது மருத்துவப் பையுடனும் கையெறி குண்டுகளுடனும் அவளை அதிகமாகக் காணலாம். அவளுக்கு ஓய்வு என்பதே இருந்ததில்லை. தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மேலாக முன்னணி நிலைகளுக்கு அவசரமாக வெடிபொருட்கள் வழங்கவேண்டுமா? உடனே முன்வருவாள். உணவு - தண்ணீர் வழங்கவேண்டுமா? நேரம் காலம் தேவையில்லை செந்தாவுக்கு உடனே புறப்பட்டுவிடுவாள். அது புதூரின் காட்டுப்பகுதி. சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரின் அமுக்க வெடிகள் அடிக்கடி முழங்கும் பகுதி. அன்றும் காலையே அமுக்கவெடித்தொகுதியொன்று வெடித்தனால் அன்றைய நாள் உணவு மாலையே வந்துசேர்ந்தது. முன்னணி நிலைக்கான உணவுகளை வழங்கும் பொறுப்பு செந்தாவிடம் விடப்பட்டது. அவளுக்குத்தான் அந்தப் பாதைகள் அத்துப்படி. ஒன்பது பேர் கொண்ட அணி புறப்பட்டது.

அதில் முதலாவது ஆளாக செந்தா செல்ல, அவளுக்குப் பின்னால் குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு ஏனையவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். சிலகாவலரண்களுக்கு உணவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சல காவலரண்களுக்குத்தான் வழங்க வேண்டும். அணி அடுத்த காவலரண்நோக்கி நகரத் தொடங்கியது. சடுதியாக மிக அருகில் வெடித்த அமுக்கவெடியால் தூக்கி எறியப்பட்ட செந்தா, நிதானித்துக்கொண்டு சுடுவதற்காகத் தனது சுடுகலனைத் தூக்கினாள்.

ஒருகை இயங்க மறுத்தது. அப்போதுதான் விழுப்புண்ணடைந்திருப்பதை அறிந்துகொண்ட செந்தா திரும்பிப் பார்த்தாள் எவரையும் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தாள் சத்தமில்லை. மெல்லப் பின்நோக்கி நடக்கத்தொடங்கினாள். இடையில் காலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆண்போராளி கிடந்தார். ஆனால் செந்தாவால் அந்தப்போராளிக்கு உதவமுடியாதநிலை. உதவி அணியைக் கூட்டிவருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தவளை சம்பவ இடம்நோக்கி அணியுடன் வந்துகொண்டிருந்த கொம்பனி பதில்முதல்வி குயில் கண்டுகொண்டார். செந்தாவைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, அவளின் தகவலின்படி சம்பவ இடத்தையும் சுற்றுப்புறச் சூழலையையும் தேடுதல் செய்த குயிலின் அணி விழுப்புண்ணடைந்தவர்களை மீட்டு வந்தது.

சிறிலங்காப் படையினரின் அமுக்கவெடித் தாக்குதல்களுக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கும் பெயர்போன இடம்தான் குஞ்சுக்குளம் நவ்விப்பகுதி. அங்குதான் அரசியல்துறை மகளிர் தாக்குதலணியும் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பிளாட்டூன் பதில் முதல்வி கப்டன் கவிப்பிரியாவுடன் சுடர்மதி, முல்லை கதிரினி, சில ஆண் போராளிகள் என்று தமது கடமைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். ஆறுகள் நிறைந்த வவுனியாக் களமுனையில் இவர்களும் அருகருகே இருந்த இரண்டு ஆறுகளைக் கடந்தே செல்லவேண்டும். பாதிப்பேர் முன் ஆற்றையும் மீதிப்பேர் பின் ஆற்றையும் கடக்க முற்பட்டனர். முன்னால் சென்ற கப்டன் கவிப்பிரியாவுக்கு சிங்களப் படையினரின் மணம் மூக்கினுள் நுழைந்ததோ என்னவோ அணிகளுக்குச் சைகை காட்டி நிலையெடுக்கச் செய்யவும், பதினைந்து இருபது மீற்றர் இடைவெளித் தூரத்தில் உருமறைப்புடன் அமைந்திருந்த நிலையிலிருந்து அவர்களின் சுடுகலன்கள் அவர்களைக் குறிவைத்துக் குண்டுகளைத் துப்பத்தொடங்கின.

கணப்பொழுதில் சமாளித்துக்கொண்ட கப்டன் கவிப்பிரியாவின் அணியினரும் தமது சுடுகலன்களால் தாக்க, வனம் அதிர்ந்தது. சுடர்மதியும், முல்லையும் ஆண்போராளி ஒருவரும் பின் ஆற்றுக்குள் நிலையெடுக்க அணி இரண்டாகப் பிரிந்துவிட்டது. வேகமாக முடிவெடித்துச் செயற்பட்டாள் முல்லை. கையெறி குண்டுடன் மாத்திரம் வந்திருந்த ஆண் போராளியைத் தங்களுக்குப் பின்னால் வரும்படி கூறிவிட்டு. சுட்டுக்கொண்டு முன்னேறி முன்னேறி அணியுடன் இணைந்துகொண்டனர் முல்லையும் சுடர்மதியும். அணிகளை ஒருங்கிடைத்துக் கொண்டு தாக்குல்களைக் கொடுத்துக்கொண்டே தமது பாதையை மாற்றிப் பயணத்தைத் தொடர்ந்தனர் கப்டன் கவிப்பிரியாவின் அணியினர்.

உலகமங்கை