Saturday, February 28, 2009

தலைவர் பிரபாகரன் தொடர் 4

ல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக்கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த பிஸ்டல்கள். கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக்கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த மெக்கானிக்கின் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

துருப்பிடித்த பிஸ்டல்களைக் கழற்றிப் போட்டு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்துவிட்டு மெக்கானிக் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டுவிட்டு, மெக்கானிக் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம். ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்துவிட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விஷயம். போலீஸ் தேடத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்டபின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிற தமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பாயிண்ட் பெட்ரோவுக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. ஷெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக்கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார்.
எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

கஷ்டம்தான் இல்லை? யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். இல்லையே என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது இஷ்ட உணவாகிவிட்டிருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். அப்பா, நீங்களா? இங்கேயா?

போலீஸ்காரன் தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்' என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல; அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே போலீஸுக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..

தொடரும்


தலைவர் பிரபாகரன் தொடர் 3

ந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.

வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜகதீஸ்வரியிடம் கேட்டார். ம்ஹும். வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா?

தெரியவில்லையே அப்பா என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.

திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்? கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். ரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள்.

அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விஷயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது.

அதில்தான் கைவைக்கிறார்கள். நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.

இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.

தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் போஸ்டர் ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே? தம்பி, நீ போஸ்டர்தானே ஒட்டுகிறாய்?

புன்னகைதான் பதில். அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?

தம்பி வந்துவிட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். எங்கே போய்விட்டாய், தம்பி?

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்துகொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகிவிட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்றுகொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்துவிட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோஷம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக்கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்றுமுன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..


தலைவர் பிரபாகரன் தொடர் 2

ந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விஷயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?

பதில் சொல்லமாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியேவிடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?

அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?

பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். ``அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?''

தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?

வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?

`திருமேனியார் குடும்பம்' என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக்கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாகவேண்டியிருக்கிறது.

என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.

குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?

அதிர்ந்து போனார் வேலுப் பிள்ளை. திருப்பித் தாக்குவதா?

ஆம். அதிலென்ன தவறு என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.

அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட்.

`தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்...'

பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக்கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திர போஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாஷின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.

பிறகு பகத்சிங்கைத் தெரிந்துகொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?

அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்...

வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?

பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல. திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.

(தொடரும்)


தலைவர் பிரபாகரன் தொடர் 1

கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே'' என்றார் காண்டீபன்.

`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?' என்று இன்பம் கேட்டார்.

``கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.

அலுவலகமெல்லாம் சரிப்படாது. நடு வீதியில் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளவேண்டும். வீட்டுக்கே போய் வேலையை முடித்துவிடலாம். காரில் போகும்போது சுட்டுவிடலாம். ஏதாவது விழாவுக்கு வருவான். மேடையில் முடித்துவிடலாம்...''

இடம், தேதி, தருணம் தீர்மானித்து, ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்ட விவரம் தெரியாமல் நண்பர்கள் லொக்கேஷன் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதும். குடித்துவிட்டு மணிக்கணக்கில், சமயத்தில் முழுநாள் கூட உட்கார்ந்து விவாதிப்பார்கள். பேச்சில் சூடு பறக்கும். சிந்திக்கும் கணத்திலேயே செய்து முடிக்கும் வெறி கண்ணில் ஒரு மின்னல்போல் வெட்டும். எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தாலும், ஏதாவது செய்தாகவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது எண்ணமில்லை.

ஏதாவது செய்வதற்கு ஒரு தொடக்கம் வேண்டும். முந்தைய தலைமுறையின் `ஏதாவதுகள்' எதுவுமே பிரயோஜனமில்லை. அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஊர்வலம் போனார்கள். கறுப்புக் கொடி காட்டினார்கள். மேடை போட்டுப் புலம்பினார்கள். கைதாகி, அடிபட்டு, எலும்பு முறிந்து படுத்தார்கள். என்றாவது ஒருநாள் ஏதாவது நடக்கும் என்கிற வண்ணமயமான கனவைச் சாப்பிட்டபடி வாழ்ந்து முடித்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

இனி அந்த வழி உதவாது. மறு கன்னத்தைக் காட்டிய பெரியவர்களே, உங்களை மதிக்கிறோம். ஆனால் பின்பற்றுவதற்கில்லை. அறவழிப் போராட்டங்கள் மனிதர்களுக்குப் புரியும். சிங்களர்களுக்குப் புரியாது. எங்கள் பாதை வேறு. எங்கள் பயணம் அபாயகரமானது. பணத்தையல்ல; எங்கள் உயிரை நாங்கள் முதலீடு செய்கிறோம். நாளைய சந்ததிக்கு சுதந்தரம் அசலாகவும், நிம்மதி வட்டியாகவும் கிடைத்துவிட்டுப் போகட்டும்.

இதோ, தொடக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக துரையப்பாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஆல்ஃப்ரட் தங்கராஜா துரையப்பா. தமிழர்தான். ஆனால் தொகுதியில் எந்தத் தமிழரோடும் உறவற்றவர். பிறகு எப்படி வோட்டு வாங்கி 1960 முதல் 65 வரை யாழ்ப்பாணம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார் என்று உடனே கேட்பீர்கள். தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைய, சுயேச்சையாக நின்ற துரையப்பா வெற்றி பெற்றது எப்படி என்பீர்கள். அடுத்த ரவுண்டில் மேலும் எப்படி மேயரானார் என்பீர்கள்.

நாங்கள் அரசியல்வாதிகளல்லர். ஆனால் அருவருப்பு அரசியலின் ஆணிவேர் வரை எங்களுக்குத் தெரியும். கோட்டைக்குப் போகும் வேட்கையில், வோட்டுக்குப் பேசும் பேச்சுகளின் அபத்தம் சாத்வீகிகளுக்குப் புரியாதிருக்கலாம். அந்தத் தலைமுறைதான் அவனை நம்பி உட்காரவைத்தது. எங்களிடம் அது பலிக்காது.

எத்தனைபேர் முயற்சி செய்திருக்கிறார்கள்! அமைதியல்ல; ஆயுதமே தீர்வு என்று முடிவு செய்து களமிறங்கிய தலைமுறையின் முதல் நபர் தொடங்கி அன்றைக்கு அத்தனை பேருக்குமே அதுதான் முதல் கனவாக இருந்தது. துரையப்பாவைக் கொல்லவேண்டும். சிவகுமாரன் முயற்சி செய்திருக்கிறார். சத்தியசீலனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது. அவரது தமிழ் மாணவர் பேரவையில் இருந்த அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள். பேரவைக்கு வெளியே இருந்த இளைஞர்களிடையேயும் அது கனவாக இருந்தது. இது கொலையல்ல; களையெடுப்பு.

யாராலும் முடியவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை. துரையப்பா லேசுப்பட்ட ஆளில்லை என்பதும் ஒரு காரணம். மாநகரத் தந்தை. பாதுகாப்பு பந்தோபஸ்துகள் அதிகம். அரசியலின் மேல்மட்டம்வரை தொடர்புகள் உண்டு. கொழும்பு செல்வாக்கு அதிகம். ஆனாலும் யாழ்ப்பாணம்தான் அவரது தலைநகரம். அங்கே இங்கே நகரமாட்டார். எதிரே யாரும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. போகிற வழியெல்லாம் மூக்குக்கு நேரே இரு கைளையும் உயர்த்திக் கும்பிட்டபடி போகிற பழக்கம் வந்துவிட்டது. அத்தனை மக்களுக்கும் நண்பன் என்று சொல்லிக்கொள்வார். வடக்கில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பமும் தனக்கு உறவு என்பார். கிறிஸ்தவர் என்றாலும் ஹிந்து கோயில்களுக்குப் போவார். கடவுள் ஒரு பொருட்டில்லை என்றாலும் அது ஒரு கம்பீரம். ஆஹா, மத நல்லிணக்கவாதி. நம்மில் ஒருவர். நமக்காக இருப்பவர்.

அவருக்குத்தான் கட்டம் கட்டினார்கள். நாங்கள் கொலை செய்யப் போவதில்லை. கொசு மருந்தடிக்கப் போகிறோம். கொசு மருந்தடிப்பது கொலை என்றால் இதுவும் அப்படியே ஆகுக.

`சீக்கிரம் சொல். எங்கே செய்யப் போகிறோம்?' காண்டீபன் கேட்டார். அவர் அமிர்தலிங்கத்தின் மகன். எனவே அப்பாவின் வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாலை வேண்டாம் என்று நினைத்தார்.

இது ஒரு பிரச்னை. பெரிய பிரச்னை. ஒரு பொதுக்காரியம் என்று எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு சொந்த விருப்பு வெறுப்புகள் குறுக்கே வருவது அடுக்காது. இங்கேதான் தடுக்கும். இதுதான் காலை வாரும். இதற்கு உண்ணாவிரதம் தேவலை. ஊர்வலமே போதும். பொதுக்கூட்டம் இதனினும் பெரிது. ஏன் நண்பர்களே உங்களுக்கு இது புரியவில்லை?

போட்டுவைத்த திட்டத்துக்கு மாற்றாக வந்த அனைத்து யோசனைகளையும் அந்த இளைஞன் நிராகரித்தான். ``காண்டீபன், நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். இன்பம், நீங்களும். நமது நட்பு எப்போதும் தொடரும். ஆனால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றுவது காரியத்தைக் கெடுக்கும். நாம் பேசித்தான் முடிவெடுத்தோம். ஆயிரம் முறை பேசலாம். ஆனால் முடிவு என்பது ஒருமுறை எடுப்பது. இன்னொரு விஷயம். நம்மில் சிலர் இந்தத் திட்டம் பற்றி வெளியே பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வேண்டாம், அவர்களும் விலகிக்கொள்ளட்டும். ஒரு துளி பயம் என்பது ஒரு துளி விஷத்துக்குச் சமம். எனக்கு அது இல்லை. எனவே நான் முடித்துவிடுகிறேன்.''

1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த பிரபாகரன், ஆல்ஃப்ரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்றபோது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். அவர்களுக்கெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.

திட்டத்தில் அவர் எந்த மாறுதலையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே வட்டுக்கோட்டை தொகுதி. பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசல். வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா அங்கே வருவார். மாலை வேளை பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்வார்.

அன்றைக்கும் வந்தார். பிரபாகரன் காத்திருந்தார். உடன் சில நண்பர்கள். கிருபாகரன், கலாபதி, பற்குணம்.

துளி பதற்றமில்லை. பயமில்லை. கரங்கள் உதறவில்லை. நான் இதைச் செய்யப்போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜப் பெருமாள். அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரையப்பா, பிரபாகரனால் சுடப்பட்டார்.

இறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அருகே கிடந்த துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன் வேகமாக ஏதோ கிறுக்கினார். அதைத் தூக்கி துரையப்பாவின்மீது போட்டார். அதில் TNT என்றிருந்தது. அவர் வந்த காரிலேயே ஏறிக்கொண்டார்கள். பற்குணம் வண்டியை ஓட்டினார்.

நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ம் நம்பர் பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஏறி, யாழ்ப்பாணம்.

இறங்கியதும், ``சரி பாப்பம்'' என்று பிரபாகரன் விடைபெற்றார். இன்னொரு பஸ் பிடித்து வல்வெட்டித்துறைக்குப் போனார்.
வீட்டில் அப்பா திருவாசகம் படித்துக்கொண்டிருந்தார். பார்த்ததும் புன்னகை செய்தார். அப்பா என்றால் அன்பு. அப்பா என்றால் புன்னகை. அப்பா என்றால் சாந்தம். ``சாப்பிட்டீர்களா அப்பா?''

பிரபாகரன் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். நிம்மதியாகத் தூங்கினார். செய்தது பற்றிச் சிந்தனை ஏதுமில்லை. இனி செய்யவேண்டியது பற்றித்தான்.

(தொடரும்)

Sunday, February 22, 2009

அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து.....

இலக்கம் 109,
இடதுகரை வாய்க்கால்,
இரணைப்பாலை,
வன்னிப் பெருநிலப்பரப்பு,
தமிழீழம்.
மாசி 21, 2009.

அன்புள்ள அப்பாவுக்கு!

வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.

பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.

கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.

அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய 'கிளைமோர்'த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் 'கிளைமோர்'த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.

அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்.

அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.

ஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.

இப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது - அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே? அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!!

அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்.... கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன?!

அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.

பின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.

அதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.

இருபதாண்டுகள் முன், 'அன்பு வழி' யில் 'பூமாலை'யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே?

அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?

அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்..? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்று?கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?

எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா?யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?

அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.

அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை.... இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.

பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது 'கிபிர்' தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.

அதுவும் அம்மாவிடம் 'நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்'!இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.

இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.

பேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.

இனியென்ன, சந்தேகமே வேண்டாம்... அஞ்சி அஞ்சி... அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது!நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!

சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!

பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.

அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் "மகளிர் எழுச்சி நாள்" முதல் முழுமையாய் - முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்.

இதுவரை நான் முழு நேரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே?

என்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.

அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா?

அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா? சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா? நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.

எங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ.

உங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.

இந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.

அப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா! என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது - சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .

இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது.

அவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் "இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்'' என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.

அப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் - முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.

எனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே? தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது?முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா?

மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளுக்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.

வேறென்ன அப்பா?
இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. 'இந்த மண் எங்களின் சொந்த மண்' என்ற பாட்டுக் கேட்கிறது.

அம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.
நன்றி.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
இப்படிக்கு,
என்றும் உங்கள் அன்பு மறவாது
தேசம் விடுதலை காண உழைக்கின்ற
அன்பு மகள் தேவகி

Saturday, February 21, 2009

வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார்.

இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

வான்கரும்புலிகள்


கேணல் ரூபன்


லெப்.கேணல் சிரித்திரன்

சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான

கேணல் ரூபன்

லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?

யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

அன்புக்குரிய மக்களே!

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது?

If we don’t fight for our freedom who else will?

வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.

ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!

எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் 'ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.'

'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.

அன்புக்குரிய மக்களே!

எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!

தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!

எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!

உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!

சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!

நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்"

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"

இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.














சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்:

Saturday, February 14, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

சிங்களத்தின் போர் வெற்றி உச்சங் கொண்ட பொழுது நிலப்பரப்புக் குறுகித் தமிழர் வாழ்வு அவல முற்றுதத் தவிக்கின்றது. இந்த இக் கட்டை முற்கூட்டியே உணர்ந்து கொண்ட செருந்தியின் அம்மா தனது குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு படைவ ல்வளைப்புக்குள் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். எல்லோரையும் கூட்டிச் செல்வதற்கு முன் கணவரும் தானுமாக ஊருக்குச் சென்று நிலைமையைக் கணக்கிட்டனர்.

அம்மாவுக்கு அகவை ஐம்பது. ஐயாவுக்கு ஐம்பத்தைந்து. ஊருக்குச் சென்ற தனது வயது முதிர்ந்த தமக்கை ஒருவருடன் செருந்தியின் தாயார் கோயிலுக்குச் சென்றார் இருவரும் நல்ல முதியவர்கள். கோயிலுக்குப் பக்கத்தில் சிறு பற்றைக் காடுகளும் படையினரின் அரண்களும் இருந்தன. படையரண்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது பற்றைக்குள்ளிருந்து விசில்சத்தமொன்று இவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. திரும்பிப் பார்த்தபோது சிங்களப்படையாள் ஒருவன் இவர்களிருவரையும் பற்றைக்குள் வருமாறு சைகையால் அழைப்பு விடுத்தான். இடுப்புக்குக் கீழே அவனுடலில் உடையில்லை திகைத்துப் போன அந்த மூதாட்டிகள் இருவரும் திரும்பிப் பாராமல் வந்த வழியே வீட்டைச் சேர்ந்தனர்.

செருந்தியின் அம்மா தனது பெட்டி படுக்கையை அடுக்கிக் கொண்டு வன்னிக்கு வந்து சேர்ந்தார். நடந்ததையெல்லாம் தனது மகளிடம் கூறினார். தங்கையையும்இ தம்பியையும் கூட்டிக்கொண்டு சென்று ஊரில் வாழும் நினைப்பை அடியோடு மறந்தார். "சிங்களப் படைகள் ஊரில் இருக்கும் வரை தமிழ்ப் பெண்களின் வாழ்வு எப்போதும் அச்சம் நிரம்பியதாகவே இருக்கும் வெறிகொணட் அந்த மிருகங்களுக்கு இளையவர்இ முதியவர் என்ற வேறுபாடுகள் எதுவும் தெரிவதில்லை.

துப்பாக்கி ஏந்தியபடி ஊருக்குச் செல்வது தான் சரியான முடிவு" என்பதைக் களத்தில் நிற்கும் செருந்தி தாயாருக்கு உணர்த்தினார். அவரது தாயாரும் இப்போது உண்மையை உணர்ந்து இடருக்குள் வாழ்கின்றார் என்றபோதும் இப்போது அவருக்கு அச்சங்கள் ஏதுமில்லை.முன்னேறிவரும் எதிரிக்கு சுடு கருவியால் பதிலுரைக்கச் சமர்முல்லை இப்பொழுதும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றார். 2007 மார்ச் மாதத்திலிருந்து மன்னாரில் தொடங்கிய அவரது களமுனை வாழ்வுக்கு ஒருநாள் கூட ஓய்வுகிடைக்கவில்லை. அக்கராயன் பகுதியில் நடந்த மோதலொன்றில் ஒரு சிறிய சன்னம் அவரது மேற்கையைத் துளைத்தது. காதுக்கு அண்மையாகவிருந்த மருத்துவ நிலை யுத்திலேயே அந்த விழுப்புண்ணுக்கான சிகிச்சையை மேற்கொண்டுவிட்டுத் தொடர்ந்தும் காப்பரணிலேயே அவர் நின்று கொண்டார்.

சமர்முல்லையின் பெரியம்மாவின் மகளுக்குத் தீரா நோய்இ போர் நெருக்கடியின் நடுவிலும் அவளை மேற்சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைத்தனர். வவுனியா மருத்துவமனையில் நின்ற காலத்தில் பெரியம்மாவின் மகள் அங்கு பார்த்த பல கட்சிகளால் அதிர்ந்து போனாள். விடுதலைப்புலிகளின் சடலங்கள் என்று அடுக்கிவைக்கப்பட்ட அறைகளில் பொதுமக்களின் சடலங்களே கிடந்தன. சிங்களம் ஊடகங்களில் பரப்புரை செய்வது போல அரச செலவில் அடக்கம் செய்யப்படும். அவையெல்லாம் விடுதலைப் புலிகளினுடையவை அல்ல. படையினர் முன்னேறி வந்த போது இ அகப்பட்ட தமிழ் மக்களை வேறு பிரித்து இளவயதினர் சடலங்களாகி மருத்துவமனைச் சவச்சாலையில் கிடத்தப்பட்டிருந்தனர். தான் கண்டதையுங் கேள்விப்பட்டதையும் பார்த்துப் பயந்துபோன சமர்முல்லையின் அக்கா.. உடனயாகவே பாதை திறக்க வன்னிக்கு வந்துசேர்ந்தார்.

வருவதற்கிடையில் தனது மூன்று மகன்மாரையும் கூட்டிக்கொண்டு படைவல்வளைப்புப் பகுதிக்குள் போய்விட்டார். இவர்களது சின்னம்மாவின் பிள்ளைகள் எங்கே? சின்னம்மா எங்கே? அனைத்தையுங் கேள்வியுற்ற சமர்முல்லைக்கு வேதனையாகவிருந்தது. யாவற்றையும் கண்முன்னே கண்டு நிலைமையைத் தெரியப்படுத்த வந்த அக்காவுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. சமர்முல்லையைத் தொடுவதற்குச் சாவு பயந்துபோயிருக்கின்றது. போராடும் அகவையில் எதிரியிடம் அகப்பட்ட அவரது தம்பிமார்களைச் சாவு துவைத்து மிதித்துப் போட்டிருக்கின்றது.எப்படி வாழ்கின்றோம் என்பதைப் பொறுத்தேத சாவு வந்து எதிர்ப்படும்இ போராட மறப்பவர் கொல்லப்படுவர். தற்காத்துக்கொள்பவர் போரை வெல்வார். சமர்முல்லையும் அவரது உடன் பிறவா மூன்று தம்பிகளும் இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுக்கள்.

களத்தில் நின்று போராடி விழுப்புண்ணேந்திப் படுக்கை ஓய்வில் இருக்கிறார் கெங்கா களத்தில் எதிரிகளின் சன்னடிமழைக்கு நடுவில் நின்றபோதும் அவர் நடுங்கியதில்லை. போராடும் வேளையில் வீரச்சாவை எதிர்கொண்ட தோழியரின் வித்துடல்களைக் கண்டபோதும் அவர் துவண்டதில்லை. எதிரியின் சன்னந் துழைத்து வயிறு கிழிந்தபோதும் அவர் வாடித் துடிக்கவில்லை. ஆனால் தருமபுரம் மருத்துவமனையில் ஏழு அகவைகொண்ட மதியழகன் என்ற சிறுவனைப் பார்த்தபோது அவர் நடுநடுங்கிப் போனார்.

மதியழகன் கல்லாறு மக்கள் குடியிருப்பில் உறங்கிக் கொண்ருந்தபோது கிபிர் விமானங்கள் நள்ளிரவு வேளையில் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தான். வயிற்றுப் பகுதியையும் முள்ளந்தண்டையும தாக்கிய சன்னம் அவனது இயக்கத்தை இடுப்பின் கீழே முடக்கிப்போட்டிருந்தது. அன்றைய நாள் அவனது தாயும்இ உடன்பிறப்பும் இவனுடன் காயமடைந்தனர். தாயின் தந்தை கொல்லப்பட்டார். கிழிந்த நார்போல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை மருத்துவர்கள் மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். பல நாட்களாக உணவின்றிக் கிடந்த அவனது தோற்றம் பார்ப்பவர் மனங்களை உலுக்கியெடுத்து.

கெங்காவுக்கு அவனைப் பார்க்கையில் அந்த எதியோப்பியக் குழந்தை தான் நினைவுக்கு வந்தது. ஓட்டியுலர்ந்த உடல்இ உணவுக்கு வழியற்ற நிலை. அருகிலே அக் குழந்தையின் சாவுக்காய் தவங்கிடக்கும் பிணந்தின்னிக் கழுகு அன்று உலகையே ஒரு கணம் உலுக்கியெடுத்த அந்த எதியோப்பியக் குழந்தையின் உருவம் அவளது கண்ணெதிரே தெரிந்தது.குச்சிக்குச்சிக் கையுடனும் கால்களுடனும் உள்ளொடுங்கிய விழியிரண்டுடனும் இடுப்பின் கீழ் உணர்வற்ற நிலையில் மதியழகன் கிடந்தான்.பட்டினிக்கு பதிலாகப் படுகாயம். பிணந்தின்னிக் கழுகாகப் போர்வெறி தலைக்கேறிய சிங்கள அரசும் அதற்கு உதவும் நாடுகளினாலும் சிறிது சிறிதாகச் செத்துக்கொண்டிருக்கின்றான். அந்தச் சிறுவன் வாழும் பிணமாகக் காட்சி தரும் அவனது நிலை ஈழத்தின் எந்ச் சிறுவருக்குமே வரக்கூடாது. கிட்டத்தட்ட மதியழகன் போலவே வயிற்றுக் காயத்தால் உடல் பிய்ந்து பாதிக்கப்பட்டாலும் மெதுவாகத் தேறியெழுந்து நடமாடக் கற்றுக் கொண்டிருக்கிறாள் கெங்கா. மதியழகனைப் போல உயிர் துடிக்கச் செத்துக் கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகளுக்காக அவளது உள்ளம் நெருப்பாய்க் கொதித்தது.

சிங்களம் ஏவிவிடும் எறிகணைகளும் வான்குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் ஒரு முறையுடன் ஆறி அடங்கிப்போய்விடும் ஆனால் அவை மூட்டிவிட்ட மனங்களின் நெருப்பு மட்டும் ஒருநாளும் ஆறி அடங்கிவிடுவதில்லை. அது தணல் பூத்துக்கிடக்கும் தக்க வேளையில் மூசியெழுந்து மூர்க்கங் கொண்டு சுழலும் ஒருமுறையல்ல பலமுறை எரிக்கும் பலம் அதனுக்குண்டு கருக்கும் வேகம் அதனுக்குண்டு.வீரத்தேவி பெயருக்கேற்றாற்போல வீரத்தேவிதான். 2ஆம் லெப். மாலதி படையணிக்கு அவளது வீரமும் பலம் சேர்ந்திருக்கின்றது. வீட்டுக்கொருவர் போராடவேண்டுமென்ற அழைப்புக் கிடைக்கும் முன்பே அவள் போராடப் போய்விட்டாள். அவள் மட்டுமல்ல அவருடன் வீட்டில் நான்கு பேராகப் போராட்டத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். தந்தை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுடன் இணைந்து செயற்படுகின்றார். தமையன் ஒருவரும் தம்பி ஒருவருமாக களத்தில் பணியாற்றுகின்றனர். லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார்ப் பிரிவிலிருந்து மற்றொரு அண்ணன. லெப்.கேணல் வீரத்திலகனாக மண்ணுள் விதையாகிப் போனார். இப்போது வீரத்தேவியும் இவர்களுடன் இணைந்து தேசக் கடமையைத் தோள்மேல் சுமக்கின்றாள்.

"தனியொருவர் மட்டும் போராடினால் போதாது. குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் இணைந்து தோள் கொடுக்கும்போதுதான் விடுதலையை வெல்லமுடியும்" என்பது அவளது முடிவு தமிழர் நிலத்தைக் கூறுபோட்டுப் பிளந்து துண்டாடிவிட எதிரிமுனைகின்றான். காடுஇ வெளிஇ கடல் வயல் என்று பாராமல் அங்குலமங்குலமாக நகர்ந்து படையெடுத்து வருகின்றான். வீடுஇ தோட்டம் தேடிய தேட்டம் யாவற்றையும் விட்டுவிட்டு மக்களெல்லாரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். தமிழீழத்தில் சண்டை நடக்காத ஊர் ஏது? நிலவுக்குப் பயந்தொளித்துப் பரதேசம் போகமுடியாது. அதுபோலப் போருக்கஞ்சி ஓடவும் முடியாது வீரத்தேவியின் குடும்பத்தைப் போல எல்லாக் குடும்பமும் போருக்குத் திரும்பினால் வரும்படை சரியும் விரைவில். மூக்கால் அழுதுகொண்டும் கதைப்பதற்குத் திருப்பிக் கதைத்துக்கொண்டும் இருக்கும் வானியைப் பார்த்தால் எவரும் துணிந்தவள் என்று சொல்லமாட்டார்கள். எந்நேரமும் பகிடியும் பம்பலுமாக அவளிருப்பதைப் பார்த்தவர்கள் எத்தகைய துன்பத்தையும் தாங்குபவளாக அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள். அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள்.

வாணி துணிந்தவள். எத்தகைய துன்பத்தையும் தாங்குபவள். துப்பாகியுடன் களத்தில் நிள்றாள். ஒளிப்படக்கருயுடன் தளத்ததில் நின்றாள். இடப்பெயர்வுக்கு நடுவில் ஓயாது உழைத்தார். போர்க்களம் அழைத்த போதெல்லாம் புயலாய் நின்றாள். சிறுத்தை அணியின் சிறப்புப் பயிற்சி முறியடிப்புக்கான பயிற்சிஇ சிறப்புப் பாதுகாப்புப் பணிஇ நிதர்சனத்தின் படப்படிப்புப் பயிற்சி என்று பலதரப்பட்ட பணிகளைச் செய்து அறிவியல் நகரில் சண்டைப் படப்பிடிப்புப் பணியில் நின்றபோது சாவு அவளை வந்து சந்தித்தது. அதுவரையும் சிரித்துக்கொண்டும்இ கதைத்துக்கொண்டும்இ இயங்கிக்கொண்டும் இருந்தாள் அவர்இ ‘ஈரத்தீ முழு நீளப் படத்தில் அவள் நடந்தாள். உண்மையிலே ஒரு ஈரத்தீயாகவே இருந்தாள் அவள். கலைப்பணியைத் தாங்கி மக்களிடையே நின்றுழைத்தாள். போர்ப் பணியைத் தாங்கி களம் நடுவே நின்றுழைத்தாள். மேஜர் ஈழவாணி சிரிப்புடனே மடிந்தபோது எவ்வித தேசமுமின்றி அவளது கைகளுக்கு நடுவே பாதுகாப்புடன் கிடந்தது படப்பிடிப்புக் கருவி அதில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளே எம் விடுதலைப் போரை எடுத்துரைப்பதற்கான கருவி.

-அம்புலி-

மேஜர் கிருபன்

லெப்.கேணல் கோபி மாஸ்ரர்

கப்டன் புலிவேந்தன்

வீரவேங்கை தன்மொழி

Blog Archive