Sunday, September 7, 2008

உள்ளிருந்து ஒரு குரல்

அலைகடலில் படகேறி, குடாரப்பு வில் தரையிறங்கி, மாமுனை கடந்து, தொண்டைமானாறு கடனீரேரியைக் குறுக் கறுத்து நடந்து, யாழ்ப்பாண நெடுஞ்சாலை யின் கழுத்தில் ஒரு காலை வைத்தபடி இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் போரணிகளோடு 2000.03.30 அன்று சாடையாக முட்டிப் பார்த்த சிங்களம் 2000.04.02 அன்று பெருந் தாக்குதல் ஒன்றைச் செய்தது. தன் நடவடிக் கைக்கு ஷவலிச் சக்கர எனப் பெயரைச் சூட்டியது.

தாக்குதலின் ஆரம்பமே டாங்கிகளினதும் பவள்களினதும் நகர்வாக இருந்ததால், இத்தாவில் ஊடறுப்பின் வௌ;வேறு பகுதி களில் நின்ற உந்துகணை செலுத்தும் போராளிகள் நீரேரிப் பகுதியை நோக்கி ஓடி வந்தனர். நீரேரிக் கரையிலிருந்து நெடுஞ் சாலைக்குச் சற்று அருகாமைவரை நிலை கொண்டிருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் அணிக்கும் சிங்களப் படைகளுக்குமிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. உட்புறமாகவும் சண்டை நடந்து கொண்டிருந்தது.

உந்துகணை செலுத்தும் போராளி கள் வந்து சேருவதற்கிடையிலேயே பெரும் பாலான டாங்கிகள் உள்ளே கடந்துவிட்டன. வெளிப்புறமாக வந்து நின்ற உழுபொறி யிலிருந்த சிங்களப் படையினர் இறங்க முற்படுவதைக் கண்ட முல்லைநிலா ஒரு துருப்பு எதிர்ப்பு உந்துகணையை ஏவினார். வேறு இலக்குத் தேடி நகர்ந்தார்.

நன்றாக உருமறைத்தபடி வந்த டாங்கி ஒன்றைக் கண்டுவிட்டு ஒரு உந்துகணையை ஏவினார். அதே டாங்கியை வேறொரு முனையிலிருந்து சீறி வந்த உந்துகணையும் தாக்க அது செயலிழந்து நின்றது. எல்லா இடமும் டாங்கிகளின் இரைச்சல் கேட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே வந்து, உள்வரும் இலக் கொன்றை இடைமறிக்கும் முயற்சியில் பற்றைகளுக்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்த முல்லைநிலாவிடம் இப்போது ஒரேயொரு டாங்கி எதிர்ப்பு உந்துகணை மட்டுமே இருந்தது. அதைச் செலுத்தியில் பூட்டியபடி நகர்ந்தவர் தன்முன்னே சற்றுப்பெரிய பற்றை ஒன்று இருப்பதைக் கண்டார். சூழலைவிடச் சற்று வேறுபாடாகத் தெரிந்த அந்தப் பற்றை சிங்களப் படையினரின் டாங்கி என்பதை அடையாளங்காண நீண்ட நேரம் தேவைப்படவில்லை.

சுடுகலம் அவரின் தோளேறியது. பெரும் ஓசையுடன் உந்துகணை செல்ல டாங்கி செயலிழந்தது. இனி வெறுங்கையோடு எதிரி யின் எல்லைக்குள் நிற்பது தவறு. விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நடந்தவர் பிறிதொரு பெரிய பற்றையைக் கடந்தபோது, பற்றையிலிருந்து சிங்களப் படைவீரன் ஒருவன் குதித்தான். அட! மிக அருகே இன்னொரு டாங்கி.

தனியே போன முல்லைநிலாவின் சேட் கொலரை அந்தப் படைவீரன் இழுத்துப் பிடிக்க, கணமும் தாமதிக்காமல் கைகளால் அணைத்துப் பிடித்திருந்த உந்துகணைச் செலுத்தியை உயர்த்தி அவரின் தலையில் ஓங்கி முல்லைநிலா அடித்தார். எதிர்பாராத அடியால் தடுமாறிய சிங்களப் படையின னுக்கும், பெரிதாக எதையோ எதிர்பார்த்து டாங்கியினுள் காத்திருந்த ஏனைய படையினருக்கும் விளையாட்டுக் காட்டிவிட்டு முல்லைநிலா தப்பிவிட்டார்.

தனித்த துணிவும் ஆளுமையும் மிக்க சிறந்த போராளியாக ஓயாத அலைகள்-03 இவரை அடையாளங்காட்டியது. 2ஆம் லெப்.மாலதி படையணியின் உந்துகணை செலுத்தும் போராளிகள் ஒருங்கிணைக்கப் பட்டு, ஓரணியாகிச் சிறப்புப் பயிற்சி பெற்றபோது அணியின் முதல்வியாக அவரே இருந்தார். ஆழ்கடலின் அழைப்பையேற்று இவ்வணி சில காலம் அலையேறிக் கணை வீசியபோதும் அணி முதல்வியாக இவர் இருந்தார்.

வீரம் விளைவது வெளியே தெரியாமல் இன்று அனல் வீசிக்கொண்டிருக்கின்ற மன்னார் போரரங்கில் 2ஆம் லெப். மாலதி படையணியின் கொம்பனி ஒன்றின் முதல்வியாக தனது ஆளுமையால் போர் முன்னரங்கில் பலம் சேர்த்திருந்தார். பலகாலம் அணி முதல்வராக இருந்ததால் தனக்கான விடுமுறையை அவர் விட்டுக் கொடுக்க நேரிட்டது. பலர் தமது பெற்றோர், உற்றவரைச் சந்திப்பதற்காகவும், சிலர் தேவை கருதி வீடுகளுக்கு விடுமுறையிலும் சென்றுவர, சென்றவர்கள் திரும்பும்வரை இருப்பவர்களை வைத்துக் கண்காணிப் பையும் சண்டைகளையும் செய்தபடி முல்லைநிலா மன்னாரிலேயே நின்றுவிட்டார்.

இம்முறை அவரை விடுமுறையில் விடுவதாக உறுதியான முடிவை எடுத்த படையணியின் சிறப்புத் தளபதி, இவ்விடயமாக முல்லைநிலாவின் மேலாளருடனும் கலந்து பேசினார். சரி இன்னும் இரண்டு நாட்களில் அவரை மாற்றிவிட ஆள் வரும் அவர் போகலாம். ஆனால் தான் போகமுன் சில வேலைகளை முடித்துவிட அவர் விரும்பினார். விடுமுறை முடிந்தபின் வந்து செய்வதற்குத் தாமதமாகி விடும் போரரங்கில் ஷநாளை செய்யலாம் எனப் பிற்போடக்கூடிய வேலை என்று ஒன்றும் இல்லை. செய்வதை இன்றே நன்றே செய்வது சிறப்பு.

லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணி வெடி அணியின் பணி தேவைப்படுவதாகத் தான் கருதிய இடமொன்றுக்கு அவர்களில் சிலரைக் கூட்டிப்போனார் முல்லைநிலா. அது எமக்கும் சிங்களப் படையினருக்கும் இடையிலான சூனியப் பகுதி. அதற்குள் சிங்களப் படையினருக்கும் இவர்களுக்கு மிடையே உண்டான சண்டையில் லெப்.கேணல் முல்லைநிலா விடுதலைக்கான தன் பணிக்கு முற்று வைத்தார்.

விடுமுறையில் செல்லவிருந்தவரின் வீரச்சாவுச் செய்தியைச் சுமந்து நாங்கள் வீடு சென்றோம்.

அன்புள்ள அப்பா,

இங்கே நான் நலம், அங்கே அனைவரும் நலமோடிருக்க மனம் நிறைய வேண்டுகின்றேன்.
என்னுடைய பிறந்த நாளுக்காக மூடை நிறைய நீங்கள் கொண்டுவந்து தந்த பலகாரங்கள் நீங்கள் விரும்பிய படியே படையணியின் எல்லாப் போராளிகளினதும் வயிற்றில் இனித்துக் கொண்டிருக்கின்றன. சொல்லாமற்கொள்ளாமல் முன் ஒப்புதல் பெறாமல் சமர் முனையின் முதன்மைத் தளமொன்றுக்கு இப்படி வருவது தவறு அப்பா. உரிய நாளில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அவாவில் நீங்கள் இப்படித் திடீரென்று வந்திறங்கியதை தாம் விளங்கிக்கொள்வதாகவும், ஆனால் இனி யொருமுறை இதுபோல வரக்கூடாது என்பதையும் தமது வேண்டுகோளாக உங்களுக்கு எழுதுமாறு முதன்மைத் தளத்துக்குரியவர்கள் என்னிடம் சொன்னார் கள். ஒருபோதும் இப்படி வரக்கூடாது அப்பா. பாடசாலைப் பேருந்துக்குக் கிளைமோர் வைக்கும் சிங்களப் படைகள் உங்களை விடுவார்களா? வருகின்ற, போகின்ற வழியில் ஏதும் நடந்தால் எவருக்கும் தெரியாமலே போய்விடும். எதை வேண்டுமானாலும் எங்களுடைய ஷமக்கள் தொடர்பகத்தில் கொடுத்தால் எங்களிடம் வந்துசேரும்.

வீட்டுச் சாப்பாடு பல நினைவுகளைக் கிளறிவிட்டது. ஆண்டு சரியாக நினை வில்லை. உங்களுக்கு நினைவிருக்கும். நான் சிறுமியாக இருந்தபோது ஏதோ காரணத்தால் அவ்வருடம் முழுதும் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டோம். வெள்ளத் தாலோ, விலங்குகளாலோ வயல் அழிந்ததாக எனக்கு ஒரு நினைவு. அவ்வருடம் என் பிறந்தநாளன்று அரையிருட்டில் என்னை எழுப்பி மாமரத்தடிக்குக் கூட்டிப்போய் ஒரு பெரிய துண்டு மாஸ்மலோசைச் சாப்பிடுமாறு தந்தீர்கள். அன்று மாலை அதேயளவு துண்டை சிறு துண்டுகளாக வெட்டி எல்லோருக்கும் கொடுத்தபோது, காலையில் நடந்ததை மூச்சுவிடாமல் எனக்கும் ஒன்றைத் தந்தீர்கள். பலகாரங்களை வாயில் போட்டபடி இந்தப்பழங்கதைகளை என்னோடு நிற்ப வர்களுக்குச் சொன்னேன் அப்பா. அவர்கள் எல்லோரிடமும் இதுபோல, ஆனால் வெவ்வேறான கதைகள் இருக்கின்றன.

வீடுபோலதான் எங்களின் போராட்ட வாழ்வும் வசதியான காலம் வரும். வாய்ப் பற்ற காலம் வரும். எல்லாம் இருந்தாலும் எதிரியோடு சண்டை செய்வோம். எதுவும் இல்லையென்றாலும் இருப்பதை வைத்துச் சண்டை செய்வோம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். நாங்கள் விடத்தல் முள் ளும் உடப்புமுள்ளும் விளையும் பூமியில் நிற்கின்றோம். எல்லாமே எங்களுக்கு ஆயுதங்கள்தான்.

எங்களுடைய ஊர்ப்பக்கம் இடையிடை யில் சிங்கள வான்கலங்கள் தாக்குவதாக அறிகின்றோம். மாமரத்தின் கீழ்தான் உங்களுக்கான பதுங்குகுழியை அமைத் திருப்பீர்கள் என நம்புகின்றேன். புதிய வீடொன்றைக் கட்டும் வாய்ப்புக் கிடைத்த போது எங்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி அறைகள், மாடியில் படிக்கும் அறை என்றெல்லாம் யோசித்துத் திட்டமிட்டுக் கட்டினோம். எவருடைய வீடுபோலவும் இல்லாமல் புதிய விதமாக முகப்பு வாயி லைக் கட்டினோம். பணமும் சிமெந்தும் தாராளமாக இருந்தநேரம் ஒரு பதுங்குகுழியை வெட்டிக் கட்டும் சிந்தனை வீட்டில் எவருக் குமே வரவில்லை பார்த்தீர்களா? போர் முடிவுறாத நாட்டில், விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மண்ணில் வாழும் நினைவு அவ்வேளை எங்களில் எவருக்குமே வரவில்லை.

சொந்த நிலத்தின் பலத்தைக் காக்க முன்வராத இனங்கள் அழிந்துபோனதை வரலாற்றில் பார்த்திருக்கின்றோம். மன்னாரில் நேரிலும் காண்கின்றேன். மாந்தைக்குப் போகும் வழியில் சேத்துக்குளத்தருகே காட்டினுள்ளே இடையிடையில் பனை மரங்களைக் கண்டேன் அப்பா. காட்டிலே எப்படிப் பனை மரங்கள் வந்தன? ஒரு நாள் காட்டினூடே நடந்துபோனபோது கட்டுப்போல தென்பட்ட ஒன்றைக் கைகளால் துடைத்துவிட்டு அமர்ந்தேன். தற்செயலாகக் கவனித்தபோது அது சுட்ட செங்கற்களிலான கட்டு என்பதைக் கண்டேன். அது வீடொன்றின் அத்திவாரத்தின் ஒரு பகுதி. அதன் தொடர்ச்சி காட்டு மரங்களால் மூடப்பட்டிருந்தது. ஒரு வீட்டை ஊடுருவிக் காட்டு மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அதுபோல பல அத்தி வாரங்களைப் பின்னர் நான் கண்டேன். ஒரு காலத்தில் துறைமுகமாக விளங்கிய மாந்தை யின் மூத்த குடிகள் வாழ்ந்து அழிந்த தடங் கள் அவை. எமக்கான நாட்டை அறுதியாக நாம் அமைக்கும்வரை நகரங்களைக் காடுகள் மூடுவது நடந்துகொண்டுதான் இருக்கும்.

இன்னொரு முக்கிய விடயம் அப்பா முன்னரைப் போல வணிகவிடயமாகவோ, வேறு ஏதுக்களுக்காகவோ வவுனியாவிற்குப் போய்வருவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். போகாமல் விடுவதே நல்லது. போனால் விரும்பியோ, விரும்பாமலோ எங்களை நீங்கள் காட்டிக்கொடுக்க நேரிடும். உங்களின் முன்னால் எதிரி ஒரு தாளை விரிப்பான்.

ஏற்கெனவே வேறு ஆட்களிடம் கேட்டுக் கிடைத்த தகவல்களின்படி அதில் எங்களுர் வரையப்பட்டிருக்கும் அதில் உங்கள் வீடு எங்கே என்று கேட்பான் பொய் சொல்ல முடியாது. வீட்டிலிருந்து இத்தனை தொலைவிலிருக்கும் இன்னாரின் வீடு, சந்தை, விடுதலைப் புலிகளின் தளம் தெரியாதா என்று உங்களிடம் கேட்டு, எடுத்த தகவலைச் சரி பிழை பார்ப்பான். பொய் சொல்ல முடியாது. உள்ளதைச் சொல்லாமல் உங்களை அவன் போகவிடமாட்டான். இனி வவுனியா போகவேண்டாம். சிங்கள வான்படைக்கு எங்கள் வீட்டிலிருந்தும் அழைப்பிதழ் போக வேண்டாம்.

நீங்கள் போராளி குடும்பம் என்பதால் சிங்களப் படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போவதற்கான ஒப்புதல் இலகுவாகக் கிடைக்கும். ஆனால் நான் போராளி என்பதற்காக யாரிடமும் நீங்கள் எதையும் எதிர்பார்ப்பதை நான் விரும்பவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் வேளைகளில் எழுதுகின்றேன். அப்பா, அடிக்கடி எழுத முடியாது. மறுமடலில் கட்டாயம் அம்மாவுக்கும் சின்னவனுக்கும் எழுதுவேன்.

நன்றி
அ.இசையமுதம்
அடம்பன்

-மலைமகள்-

0 comments:

Blog Archive