Wednesday, September 10, 2008

மாமனிதர் ஞானரதன்

படைப்பாளர் ஞானரதனுக்கு மாமனிதர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் கெளரவம்

தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளரும், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளியும், சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளரும் சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தியவருமான மறைந்த ஞானரதனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருது வழங்கி கெளரவித்தள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும், விடுதலைக்காகவும், அயராது பாடுபட்ட ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்து விட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலில் மூழ்கிப் போய்க்கிடக்கிறது.

ஞானதரன் அண்ணன் என அனைவரும் அன்போடு அழைக்கும் திரு.வை.சச்சிதானந்தசிவம் ஒரு நல்ல மனிதர். நெஞ்சத்தில் நேர்மையும் உள்ளத்தில் உயர்ந்த எண்ணமும் கொண்டவர். எளிமை அவரோடு கூடப்பிறந்தது. அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார். அனைவரையும் கவர்ந்து கொண்ட உயரிய பண்பாளர்.

இவர் ஒருதேச பக்தர் எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும், போராளிகளோடு இணைந்து நின்று தாய விடுதலைப் போரில் பெரும் பழுக்களைத் தாமும் சுமந்து கொண்டார்.

நீண்டகாலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களில் சுமந்து தனது முமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார் தனது அறிவாற்றலினாலும், கடும் உழைப்பாலும், தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியபணி என்றுமே பாராட்டுக்குரியது.

இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி, சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளர், சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார்.

பத்திரிகைகளிலும், சஞ்சிகைளிலும் ஓய்வில்லாது எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும், தேசப்பற்றையும் தட்டி எழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைக்கு சாட்டையடி கொடுத்து எமது தேசத்தில் உண்மை நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்

எல்லாவற்றுக்கும் மேலாக இவர் எமது விடுதலை இயக்கம் ஒளிப்படத்துறையில் இன்று நிகழ்த்தியுள்ள பெரும் பாய்ச்சலுக்கு நடு நாயமாக நின்று செயற்பட்டார். நிதர்சன நிறுவனம் தோன்றிய காலம் முதல் இற்றைவரை அதன் வேராகவும், விழுதாகவும் அதனைத் தாங்கி நின்று செயற்பட்டார்.

எமது விடுதலைப் போராளிகளை ஒளிப்படத்துறையில் பயிற்றுவித்து அவர்களைச் சிறப்பாக வழிப்படுத்தி நெறிப்படுத்தி, ஒரு தேசிய தொலைக் காட்சியை உலகம் பூராகவும் ஒளிபரப்புகின்ற அளவுக்கு வளர்த்தெடுப்பதில் அச்சாணியாக இருந்து செயற்பட்டார்.

சிறிய குறும்படம் முதல் முழுநீளத் திரைப்படம் வரை பல்வேறு ஒளிப்பேழைகளை ஞானதரன் என்ற பேரில் தயாரித்து நெறிப்படுத்தினார். இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து எமது விடுதலை இயக்கம் களத்திலே படைத்த சாதனைகளையும், குவித்த வெற்றிகளையும் ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகைகளாகவும், விபரணங்களாகவும், தயாரித்து அவற்றை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்த உதவினார். இவர் ஆரவாரம் இன்றி அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி அளப்பெரியது.

வை.சச்சிதானந்தசிவம் (ஞானதரன்) அவர்களின் இனப்பற்றுக்கும், விடுதலை பற்றிக்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளை கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.

சுய வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து தேச விடுதலை என்னும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் நீங்காத நினைவுகளாக காலமெல்லம் நிலைத்திருப்பார்கள்.

-----------------------
இவரிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலாகீர்த்தி என்ற விருதினை வழங்க அழைத்தபோது திரு. ஞானரதன் அவர்கள் அதனை வாங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Blog Archive